tamilnadu

img

இருளர் இன மக்களுக்கு மயான இடம் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், மே 14 காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட சேனியர்மேடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்துபோனால் அருகில் உள்ள கிளியாற்றங்கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில், உடலைப் புதைத்துவந்தனர். பின்னர் அந்த இடத்தில் சிலர் விவசாயம் செய்துவருவதால் கிளியாற்றங்கரையில் புதைத்து வந்தனர். ஆற்றிலும் புதைக்கஎதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் அரசு புறம்போக்கு நிலத்திலேயே புதைக்கத்துவங்கினர். இதனால் விவசாயம் செய்பவர்களுக்கும், இருளர் மக்களுக்கும் இடையதற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சீனிவாசன் என்பவரின் உடலைப் புதைக்க குழி தோண்டியபோது மீண்டும் அப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர், மேல்மருவத்தூர் காவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக உடல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் இருளர் இன மக்களுக்குத் தனியாக சுடுகாடு அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டக்குழு சார்பில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், தனியாக சுடுகாடு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (மே 14) ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. கிளைச் செயலாளர் கே.கன்னியப்பன் தலைமை தாங்கினார்.வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா, வட்டக்குழு உறுப்பினர் எம்எஸ்.அர்ஜூன்குமார், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் வி.பொன்னுசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மதுராந்தகம் கோட்டாட்சியர் மாலதியிடம் கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கைமனு அளித்தனர். புதனன்று கோட்டாட்சியர் மாலதி நேரில் ஆய்வு செய்து இடத்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.