கொரோனா குறித்த அச்சுறுத்தலும், அரசின் ஊரடங்கு உத்தரவும் ஏழை எளிய மக்களை பட்டினி நிலைக்கு தள்ளியது. அப்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கினர். அவர்கள் தன்னலம் கருதவில்லை, அரசின் அனுமதிக்காகவோ, ஆதரவுக்காகவோ காத்திருக்கவில்லை. தினமும் பல்லாயிரம் உணவுப் பொட்டலங்களுடன் தெருவோர வாசிகள் முதல் அரசு மருத்துவமனை நோயாளிகள் வரை பசியாற்றினர். வீடுகளில் பசியுடன் முடங்கி கிடந்தவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை வீடு தேடிச்சென்று ஒப்படைத்தனர். ரத்தம் தட்டுப்பாடு என்றதும் அரசின் ரத்த வங்கிகளை தங்கள் குருதிகளால் நிறைத்தனர். தன்னார்வலர்கள், சமூக நல அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த பணிகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சிஐடியு, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் உடுக்கை இழந்தவன் கைபோல் உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உதவியதாக கூறினார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் அன்றாட வருவாயை நம்பி இருக்கும் மக்கள் பட்டினியில் தள்ளப்பட்டார்கள். ஓட்டல்கள் மூடப்பட்டதால் அவற்றை நம்பி இருந்தவர்களுக்கு உடனடியாக உணவு தேவைப்பட்டது. குழித்துறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக உடனிருப்போருக்கும் உணவுப்பொட்டலங்கள் வழங்கத் துவங்கினோம்.
ரத்த தான முகாம்கள் |
உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் அச்சத்தாலும், ஊரடங்கு காரணத்தினாலும்,இரத்த தானம் குறைந்துள்ள சூழ்நிலையில், இந்திய மாணவர் சங்கம் உட்பட வேறு சில அமைப்புகளின் சார்பில் 72 பேர் இரத்ததானம் அளித்தனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு தொடங்கிய பின்னர் தன்னார்வலராக தங்களை அரசுடன் இணைத்து கடந்த 44 நாட்களாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பசுமை காய்கறிகள் தொகுப்பு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். |
அப்போதுதான் மதிய உணவுக்கு கோயில்களை நம்பியிருந்த நூற்றுக் கணக்கானோருக்கும் வருவாய் இழந்தவர்களுக்கும் உணவு தேவை என்பதை அறிந்த எங்களது பணி விரிவடைந்தது. தினமும் 250 முதல் 500 பேர் வரை கடந்த 43 நாட்களில் சுமார் 15,000 உணவுப் பொட்டலங்களை குழித்துறை பகுதியில் மட்டும் வழங்கியுள்ளோம் என்றார் எட்வின். இந்த பணிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், வழக்கறிஞர் சங்கம் போன்ற அமைப்புகள் எங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றின. வீடுகளில் இருந்து உணவுப்பொட்டலங்களை சேகரிப்பது, சமைத்து பொட்டலங்கள் தயாரிப்பது, விநியோகிப்பது, தினமும் வெவ்வேறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீடுகளில் உணவுப் பொருட்களை வழங்கியது, கபசுர குடிநீர் வழங்குதல், முகக்கவசம், கையுறை வழங்குதல், பிளீச்சிங் பவுடர் போடுவது, கழிவுகளை அகற்றுவது போன்ற தூய்மைப் பணிகளிலும் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
13 யூனிட் இரத்த தானமும் செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் அதிக இரத்தம் தானமாக வழங்கிய அமைப்பாக டிஒய்எப்ஐ ரத்ததானக் கழகத்துக்கு மாவட்ட ஆட்சியர் விருது அளித்துள்ளார். ஆனால், தன்னலமற்ற பாரபட்சமற்ற சேவையில் ஈடுபட்டு வரும் எங்களது அமைப்பை கோவிட் நிவாரணப் பணிகளில் இணைக்க மனு கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலளார் ஆர்.செல்லசுவாமி கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அரசின் போதிய ஈடுபாடு இல்லாத நிலையில் எங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளோம். மார்த்தாண்டம்- குழித்துறை பகுதியில் மட்டும் 1030 வீடுகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை, காய்கறி பொட்டலங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.
தூத்துக்குடியில் 3121 ஏழைகளுக்கு உதவி |
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலங்களில் இதுவரை சுமார் 3121 ஏழை,எளியவர்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை, காய்கறி தொகுப்பு, 3050 கபசுரகுடிநீர், 6220 முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அரச்சுனன் தெரிவித்தார். இதில் தூத்துக்குடி மாநகரில் 170 குடும்பங்களுக்கும், புறநகரில் 128 குடும்பங்களுக்கும், ஒன்றியத்தில் 135 குடும்பங்களுக்கும், கோவில்பட்டி நகரில் 800 குடும்பங்களுக்கும், ஒன்றியத்தில் 14 குடும்பங்களுக்கும்,கயத்தாறு பகுதியில் 53 குடும்பங்களுக்கும், எட்டையபுரம் பகுதியில் 77 குடும்பங்களுக்கும், விளாத்திகுளம் பகுதியில் 40 குடும்பங்களுக்கும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 87 குடும்பங்களுக்கும், திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் தலா 20 குடும்பங்களுக்கும், ஆழ்வை பகுதியில் 99 குடும்பங்களுக்கும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 150 குடும்பங்களுக்கும், வாலிபர் சங்கத்தின் சார்பில் 155 குடும்பங்களுக்கும், மாதர் சங்கம் சார்பில் 270 குடும்பங்களுக்கும், மாணவர் சங்கம் சார்பில் 65 குடும்பங்களுக்கும், சிஐடியு சார்பில் 209 குடும்பங்களுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் 120 குடும்பங்களுக்கும், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 45 குடும்பங்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் 464 குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். |
43 நாட்களில் சுமார் ரூ. 7லட்சம் மதிப்பிலான 15 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுபோல் நாகர்கோவில் மாநகர் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை ஒன்றரை மாதங்களில் வழங்கியுள்ளோம். இந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு திங்களன்று (மே 18) ஒரு பாராட்டு நிகழ்ச்சியும் குழித்துறையில் நடத்தியுள்ளோம் என்றார். கட்சிகள், அமைப்புகள், தனிமனிதர்களால் பசியாற்ற முடிந்திருக்கிறது. கோவிட்- ஊரடங்கால் முடங்கிப்போன மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள்தான் உதவ முடியும். ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் அறிவிப்புகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. கோவிட்டுக்கு பிந்தைய மிகப்பெரும் இயக்கமாக மக்கள் கோரிக்கைகளும், தனியார்மய எதிர்ப்பு போராட்டங்களும் அமையும். நிவாரண உதவிகளை வழங்கிய கரங்களுடன், பெற்ற கரங்களும் அந்த களத்தில் ஒன்றிணையும் என்பது உறுதி.