இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க ஒருங்கிணைந்த மின் மேம்பாடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 60 சதவீதம் மானியமும், பொதுத்துறை நிறுவனங்கள் 30 சதவீதமும் வழங்குகின்றன. மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே மாநில மின் வாரியம் நிதி வழங்கும். தமிழகத்தில் இப்போது 1695 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது. 62 மின் பகிர்மான வட்டங்களில் 37 வட்டங்களில் உள்ள 577 நகரங்களில் ஒருங்கிணைந்த மின் மேம்பாடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
தமிழக நிலக்கரி மற்றும் மின்வாரிய தலைவர் விக்ரம்கபூர், காற்றாலை உற்பத்தி கிடைப்பதால் நெய்வேலி மின்சாரம் தங்களுக்கு தேவையில்லை; வினியோகத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டார். மின்வாரிய தலைவர் எடுத்த அதிரடி முடிவால் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மின் வாரிய தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் மின் தேவை இப்போது 15 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையம் மத்திய அரசுக்கு சொந்தமானது. இங்கே மின் உற்பத்தி ஆண்டு முழுவதும் நடக்கும்.
காற்றாலை மூலமாக காற்று வீசும் மாதத்தில் அதிகமாக மின்சாரம் கிடைக்கும். இப்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எப்படி காற்றாலையில் உற்பத்தி செய்ய முடியும்? விஷயம் என்னவென்றால், தனியார் நிறுவனங்கள் மூலம் மின்சாரத்தை வாங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. நெய்வேலியில் இருந்து தினசரி 600 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு 40 ஆண்டுகளாக வழங்கப்பட்ட நிலையில் இப்போது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கு மத்திய அரசு கமிஷன் தராது. ஆனால் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரத்தை வாங்கினால் கமிஷன் தொகை கிடைக்கும். இதனால் மின்வாரிய தலைவர், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஒரு யூனிட்டுக்கு 30 பைசா வீதம் 600 மெகாவாட்டுக்கு தினசரி ரூ.18 கோடி வரையில் கமிஷன் வழங்க தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆண்டு முழுவதும் நிரந்தரமாக கூடுதலாக காற்றாலை மின்சாரத்தை வழங்க முடியாது என்பது உண்மைதான். கோடை உக்கிரத்தில் மின் தேவை இன்னும் அதிகரிக்கும். மின் வாரியம் எடுத்த இந்த முடிவால் தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.
இதை நிரூபிக்கும் வகையில் இப்போதே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு என்பது ஆங்காங்கே துவங்கியுள்ளது. பல இடங்களில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பிரச்சனையில் மாநில அரசு மின்வாரியத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
===ஐ.வி.நாகராஜன்===