tamilnadu

img

கிசான் திட்ட முறைகேடு: அரசு சலுகைகள் நிறுத்தம்....

கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடர்பாக மேலும் தற்போது வரை ரூ.11.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக பணம் பெற்றவர்கள் இன்றுக்குள் திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசால் பிரதமரின் ஊக்க நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான விதிமுறைகளில் அளிக்கப்பட்ட சில தளர்வுகளை தவறாகப் பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் உள்பட சுமார் 64 ஆயிரம் பேர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைந்தனர். 

இவர்களுக்கு சுமார் ரூ.13 கோடி வரை முறைகேடாக நிதி வழங்கப்பட்டது மாவட்ட நிர்வாகம் அமைத்த குழுவின் விசாரணை யில் தெரிய வந்தது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் தற்போது வரை ரூ.11.40 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த முறைகேடு தொடர்பாக மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப் பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் வியாழக்கிழமைக்குள் (அக்.22) திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகை களும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மோசடிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.