tamilnadu

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட  கடலூரில் 20,472 பேர் மனு

 கடலூர், டிச. 17- கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 20,472 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இருகட்டங்களாக டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 5,040 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், 683 சிற்றூராட்சித் தலைவர், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மொத்தம் 6,039 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9 ஆம் தேதி துவங்கிய நிலையில் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 12,207 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த எண்ணிக்கை வேட்புமனுத்தாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமையன்று 20,472 ஆக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 8,265 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், மாவட்ட கவுன்சிலருக்கு 213, ஒன்றிய கவுன்சிலருக்கு 2,120, பஞ்சாயத்து தலைவருக்கு 3,900, வார்டு உறுப்பினருக்கு 14,239 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுத்தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் அந்தந்த பதவியிடங்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் செவ்வாய்க்கிழமை பரிசீலனை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களது மனுக்களை வியாழக்கிழமை டிச.19 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின்னர் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சிசார்பற்ற தேர்தலில் போட்டியிடுவோருக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.