இந்துத்துவா பாசிச எதேச்சதிகாரத்திற்கு எதிராக வெடித்து எழுவார்கள்
கடலூர் கூட்டத்தில் பிரகாஷ் காரத் எச்சரிக்கை
கடலூர், ஆக. 25- நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்திருக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மோடியின் எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு நாளும் மோடி தலைமையிலான பாசிசத் தன்மை கொண்ட எதேச்சதிகார ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிராக - இடை விடாத தாக்குதல்களுக்கு எதிராக மக்களும் வெடித்து எழுவார்கள் என்று பிரகாஷ் காரத் எச்சரிக்கை விடுத்தார். கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை மாலை துவங்கி நடுநிசி வரை, கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மற்றும் கடலூர் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று நூல் வெளியீட்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று உரையாற்றிய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஆற்றிய மகத்தான பங்கினையும், ஆர்எஸ்எஸ் அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த துரோக வரலாற்றினையும் எடுத்துரைத்தார். சுதந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் ஏ.கே.கோபாலன் உள்ளிட்டோர் கடலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்ததையும், ஆந்திரப்பிர தேசத்தைச் சேர்ந்த இரண்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் கடலூர் சிறைச் சாலை துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், அன்றைய காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்த சிறைகள் முழுவதிலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்டுகளே நிறைந்திருந்தார்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது, அதன் முதல் அரசியல் தலைமைக்குழுவில் இடம்பெற்றிருந்த நவரத்தினங்கள் எனப்படும் மகத்தான தலைவர்கள் மட்டும் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் சிறையில் மொத்தம் 34 வருடங்களை கழித்தவர்கள் எனக்குறிப்பிட்ட பிரகாஷ் காரத், ஒரேயொரு ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவருக்காவது இப்படிப்பட்ட மகத்தான உண்டா எனவும் கேள்வி எழுப்பினார்.
இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்திற்குள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே தகர்க்கப்பட்டு வருகிறது; ஒரு புறம் அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள கருத்துரிமையும் குடிமை உரிமைகளும் பறிக்கப்படுகின்றன; மற்றொருபுறம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் சூறை யாடப்படுகின்றன என குறிப்பிட்ட பிரகாஷ் காரத், “காஷ்மீரில் 370வது பிரிவை ரத்து செய்து அந்த மாநிலத்தையே சிதைத்திருப்பது; மோடி அரசுக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவர்களை தேச துரோகி என முத்திரை குத்துவது; முஸ்லீம்கள், தலித்துகளுக்கு எதிராக தொடரும் கும்பல் வன்முறைகள் உள்ளிட்ட அனைத்தும் அரசியலமைப்பு உறுதிசெய்துள்ள கூட்டாட்சி தத்துவத்திற்கும் குடிமையுரிமைகளுக்கும் எதிரானவை. அதேபோல, ராணுவத் தளவாட தொழிற்சாலை ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்பட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் போராட வேண்டிய நிலைக்கு மோடி அரசு தள்ளியிருக்கிறது. மிக மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கு மோடி அரசிடம் வழி இல்லை. இத்தகைய தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் வெடித்து வீதியில் இறங்குவது உறுதி” எனக் கூறினார். இந்தப் போராட்டத்தை நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.