தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
சின்னாளப்பட்டி, ஏப்.21- ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்குடி சேலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியில் தயாரிக்கப்படும் சுங்குடி சேலை உலகப் புகழ் பெற்றதாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பிரிண்டிங் பட்டறையை மூட சொல்லி உத்தரவுப் போட்டதால் பிரிண்டிங் பட்டறை, சாயப்பட்டறை அனைத்தும் மூடப்பட்டு தொழிலாளிகள் தினமும் மதுரைக்கு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்..ஒரு சில பட்டறைகள் அனுமதி வாங்கி செயல்பட்டு வருகின்றன. இந்த ரக சேலைகள் நூலாக இருப்பது முதல் சேலையாக நெய்து, பிரிண்டிங், அயர்னிங் வரை மனித உழைப்பினால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், சாய தொழிலாளர்கள், பிரிண்டிங் தொழிலாளர்கள், சலவை தொழிலா ளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், பேக்கிங் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த சுங்குடி சேலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலை தமிழகம் மட்டுமின்றி, ஹைதராபாத், கொல்கத்தா, ஆந்திரா, கேரளா, மும்பை, தில்லி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் சின்னாளபட்டி சுங்குடி சேலை தயாரிப்பில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலையில்லாமல் பாதிப்பு அடைந்துள்ளனர். அன்றாடம் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் தற்போது வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
இது குறித்து சுங்குடி சேலை தயாரிப்பாளர் பாலசுப்ரமணியன் என்பவர் கூறுகையில், சின்னாள பட்டியில் 144 தடை உத்தரவால் பல கோடிகள் பெறுமான சேலைகள் தேங்கியுள்ளன.100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு அதில் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை .மேலும் சாயம் போடுபவர்கள் பெண்கள் ,ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. பல கோடிக்கணக்கான சரக்குகள் தேங்கும் நிலையில் உள்ளது.எனவே தமிழக அரசு, சுங்குடி சேலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் இருந்தது போலவே சின்னாளபட்டியில் மீண்டும் சாய ப்பட்டறை பிரிண்டிங் பட்டறைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று தெரிவி த்தார்.
(ந.நி)