லக்னோ, ஏப். 19-தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்குவாக்களித்துவிட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை தமிழகம்,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது.அந்த மாநிலத்தில் உள்ள புலந்த்சஹர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பவன்குமார் எனும் தலித் இளைஞர் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்துவிட்டதால், மை தடவப்பட்ட இடது கை ஆள்காட்டி விரலை வெட்டிக்கொண்டுள்ளார்.தாம் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிக்க விரும்பிய தாகவும், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்துவிட்ட தாகவும் அவர் காணொளிப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வெட்டப்பட்ட விரலைச் சுற்றி கட்டுபோடப்பட்டிருக்கும் அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது.உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றன. இதனால் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும்நிலை அங்கு நிலவுகிறது. இந்த நிலையில் ஒரு வாக்காளர் இப்படிச்செய்திருப்பது அந்த மாநிலத்தில் நிலவும் பாஜக அதிருப்தி அலையை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.