இவர்கள் வெட்கமில்லாதவர்கள். ஊர் முழுக்க செய்தி, ஊடகங்களின் காட்சி. செல்லுலாய்ட் திரையெங்கும்... சிரித்த முகத்தோடு ராஜ்நாத் சிங். ராணுவ மந்திரி ராணுவ உடையில்... ‘மிடுக்கோடு... கறுப்புக் கண்ணாடி அணிந்து கைகளை அசைத்து ‘தேஜஸ்’ ஸில் பறந்தார். என்னே ஆச்சரியம். ராணுவ மந்திரி... ராணுவ விமானத்தில் சாதாரண விஷயமா? அதுவும் தேஜஸில்.
‘தேஜஸ்’ உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போர்ப் பறவை. நேரு சொன்ன, நாட்டின் திருக்கோவில்களில் ஒன்றான எச்ஏஎல்(HAL) எனும் நவரத்தினத்தின் படைப்பு. 32,000 ஊழியர்கள், சுமார் 63898 கோடிகளுக்கான கட்டமைப்புகள், 79ஆண்டுகால நீண்ட அனுபவத்தோடு, ராணுவ உபகரணங்களுக்கான ஆய்வு மற்றும் மேம்படுத்துதல் முகமையின் உதவியோடு, இன்றளவும் விமான படைக்கான விமானங்களை, ஹெலிகாப்டர்களை, உபகரணங்களை தயாரித்து தந்து கொண்டிருக்கும் ஆற்றல்மிக்க பொதுத்துறை நிறுவனம் எச்ஏஎல்(HAL). அதன் சாதனைதான் தேஜஸ் சிட்டுப் போல பறந்து வானில் சாகசங்களை நிகழ்த்திடும் ஒற்றை எஞ்ஜின் போர் விமானம். போர் கப்பல்களின் தளத்திலிருந்தும் சீறிப் பாயும் இந்த ‘தேஜஸ்’ ஒவ்வொரு இந்தியனும் எனக்கானது என சொந்தம் கொண்டாடும் நம் இந்திய பெருமை.
இவ்வளவு அனுபவம் கொண்ட, இத்தனை ஆற்றல்கொண்ட இந்த நிறுவனத்தைத் தான் ரபேல் ஒப்பந்தத்திலிருந்து தூக்கி வீசினார்கள். இந்த தேசபக்தர்கள். பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ‘ரபேல்’ விமானங்களை நமது எச்ஏஎல்-லில் தயாரிப்பது என்றமுன் அரசின் முடிவை ஒரே நாளில் மாற்றி, விமான தயாரிப்பில் பாலபாடமே தெரியாத - எந்த கட்டமைப்பும் இல்லாத - வெறும் லட்டர்பேடு கம்பெனியான ‘ரிலையன்ஸ் டிபன்ஸூக்கு ஒப்பந்தத்தை மாற்றி எச்ஏஎல்-க்கு கேடு செய்தவர்கள்தான் ராஜ் நடத்தும், மோடியும்.
அதன் மூலம் தேசத்துக்கே துரோகமிழைத்தவர்கள் இன்று... தேஜஸில் நின்று போய் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமா வெட்கமில்லை!
இவர்களை கொண்டாடும் ஊடகங்களுக்கும் வெட்கமில்லை!
- அ.வ.பெல்லார்மின்