ஈராக் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக்கில் வேலையின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஆதரவுடன் அமைந்துள்ள அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்த அந்நாட்டு மக்கள் நேற்று முன்தினம் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பாக்தாத்தில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றனர். மக்களின் அமைதியான பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றதால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில்34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்னர். காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிரதமர் அப்துல் மஹ்தி அரசு பாக்தாத் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.