புதுக்கோட்டை, ஜூன்.3- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு தந்தையே மகளை நரபலி கொடுத்த அதிர்ச்சிகரமான கொடுமை நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகள் வித்யா(13). இவர் கடந்த மாதம் 18-ஆம் தேதி வீடு அருகே உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் தேடிச்சென்றனர். அப்போது அருகில் உள்ள தைலமரக் காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வித்யா காயங்களுடன் கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். வித்யாவின் உடைகள் கிழிக்கப்பட்டு சிதறிக்கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், சிறுமியின் தந்தை பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. பன்னீர்செல்வம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தனக்கு அதிக பணமும், புதையலும் கிடைக்க வேண்டுமென்றால் மகளைப் நரபலி கொடுக்க வேண்டுமென ஒரு மாந்தீரிகவாதி கூறியதாகவும், அதனாலேயே மகளை நரபலி கொடுத்ததாகவும் பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் நானும் எனது உறவினர் குமாரும் சேர்ந்து வித்யா அதிகாலையில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்தோம் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகிய இருவரையும் கந்தர்வகோட்டை போலீசார் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஆனால், புலன்விசாரணையில் அவரது தந்தை உள்ளிட்டோராலேயே சிறுமி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. மகளைக் கொன்றால் நிறைய பணம் கிடைக்கும், பொருள் சேரும் எனச் சொல்லி கொலைக்குத் தூண்டிய மற்றும் பூஜை நடத்திய பெண் மந்திரவாதி உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர் எனத்தெரிவித்தார். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் நரபலி கொடுத்தால் பணம்சேரும் என்ற நம்பிக்கையில் ஒரு கூட்டம் இன்னமும் இருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.