நெல்லையில் செவ்வாயன்று நடந்த சிஐடியு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் செல்வி ரேணுகா பரத நாட்டியம் ஆடினார். அவருக்கு பாராட்டு தெரிவித்து பலரும் அன்பளிப்பாக நிதி கொடுத்தனர். கரவொலியோடு நடனத்தை முடித்து திரும்பியவர் சற்று நேரத்தில் தனது பெற்றோர் அமல்ராஜ்-முத்துலட்சுமி மற்றும் சகோதரனுடன் மேடையேறி தனக்கு அன்பளிப்பாக கிடைத்த 3600 ரூபாயை சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளி வளர்ச்சிக்காக வழங்கினார். அனைவரையும் நெகிழ வைத்த மாணவியின் செயலை ஊக்குவிக்கும் வகையில் மேலும் சிலர் அன்பளிப்பு வழங்கினர். ஒருசில நிமிடங்களில் அந்த தொகை ரூ.18,900 ஆக உயர்ந்தது. கடந்த 3 மூன்றாண்டுகளாக முறையான நடனப்பயிற்சி பெற்று வருவதாக செல்வி ரேணுகாவை பாராட்டிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் அவர் நடனத்தில் சிறக்க வாழ்த்தினார். முன்னதாக பிரதிநிதிகள் மாநாட்டில் விடுத்த அறைகூவலை ஏற்று மாநாட்டுப் பிரதிநிதிகள் ரூ.38 ஆயிரம் வழங்கினர். சென்னை அயனாவரத்தில் ஏழை மாணவ- மாணவியருக்கென நிர்மல் பள்ளியை சிஐடியு நடத்தி வருகிறது. ஏழை மாணவர்களின் கல்விக்காக சிஐடியு மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு தொழிலாளர்கள் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறார்கள்.