இங்கிலாந்து அரசு உத்தரவு
ஐரோப்பா கண்டத்தில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை பிரிட்டனில் (இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து) 177 பேர் பலியாகியுள்ளனர். 3000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இங்கிலாந்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல சாதாரண உள்ளூர் கிரிக்கெட் தொடர் கூட நடத்தக் கூடாது என அதிரடி உத்தரவிடப் பட்டுள்ளது. பாரம்பரியமிக்க கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடர் 7 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.