அலங்காநல்லூர்:
மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கைஎடுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட மனு மாயமாகி விட்டதாக கூறப்படும் நிலையில் ஆலையை இயக்கமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து ரூ.10 கோடி கடனாக ஆலைக்கு பெற்றுக்கொடுத்து ஆலையை இந்தாண்டு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் திங்களன்று ஆலையில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளன.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் 2019-2020-ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு1,500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டி ருந்தது. ஆலைக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறி வந்த கரும்பு வேறு ஆலைக்கு அனுப்பப்பட்டது, அனுப்பிய கரும்பிற்கு பணம் முழுமையாக வந்து சேரவில்லை. கடன் வாங்கி வெட்டுக்கூலி கொடுக்கப்பட்டுள்ளது. வாங்கியகடனை கட்டமுடியாத சூழலில் இரண்டு,மூன்றாம் போகக் கரும்பை கட்டைக் கரும்புகளாக அழித்துவிட்டனர் விவசாயிகள். இந்தாண்டு ஆலை இயங்கவில்லை யெனில் அடுத்த ஆண்டும் ஆலை இயங்காது எனக் கருதி விவசாயிகள் கரும்பு பயிரிட மாட்டார்கள். தற்போது 40 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் நிலையில் ஆலையை இயக்கி தென் மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு ஆலையான அலங்காநல்லூர் ஆலையை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் பங்களிப்போடு தொடங்கப்பட்ட உபமின் நிலையப் பணிகள் 80 சதவீதம் முடிந்தநிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆலையை காக்க ரூ.10 கோடி
ஆலையை பாதுகாக்க தொடர்ந்து இயக்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து ரூ.10 கோடி கடன்பெற்றுத்தரவேண்டும். அந்தக் கடனைகரும்பு அரவையின் மூலம் கிடைக்கும்லாபத்திலிருந்து கழித்துக்கொள்ள லாம். தமிழக முதல்வர் அதற்கான உத்தரவை பிறப்பிக்கவேண்டும். அலங்காநல்லூர் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கிப் பணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டபல்வேறு அமைப்புகள் சார்பில் சர்க்கரை ஆலையில் திங்களன்று காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் என்.பழனிசாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயலாளர்கரு.கதிரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் அடக்கிவீரணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், ஸ்டாலின்குமார், ராமராஜ், கே.அப்பாஸ் உட்பட ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காத்திருப்புப் போராட்டத்திற்கு முன்னதாக விவசாயிகள் இருபது நிமிடம் அடையாளப்பூர்வ ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், சர்க்கரைத்துறை இயக்குநர் ஆகியோரிடம் அளித்த மனுக்கள் என்னவானது எனத்தெரியவில்லை எனக்கூறிய வழக்கறிஞர் என்.பழனிசாமி, ஆலை ஓடவில்லை என்ற காரணத்தைக் கூறி தனியாரிடம் தாரை வார்க்க அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தின் மூலம் அரசு ஆலைகளை ஒழித்துக்கட்ட முயற்சி நடக்கிறது. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அதை மூடவோ, விற்கவோ தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அனுமதிக்காது என்றார்.
விவசாயிகளின் கதி
இந்தநிலையில் 2020-ஆம் ஆண்டு ஆலைக்கு கரும்பு அனுப்பிய அரிட்டாபட்டியைச் சேர்ந்த விவசாயி பி.வளநாடு (63) கூறுகையில், “ மே மாதம் 72 டன் கரும்பு ஆலைக்கு அனுப்பினேன், சுமார் இரண்டு லட்சம் ரூபாய்தர வேண்டும். இன்னும் கிடைக்க வில்லை. வெட்டுக்கூலியையாவது முதலில் தாருங்கள் என்றால் தமிழக அரசு தர மறுக்கிறது என்றார். இதே போல் கல்லம்பட்டி முத்து, கல்லம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் கோட்டைவீரன் (எ) மச்சம் போன்ற விவசாயிகளும் ஆலைக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு அல்லாடிக் கொண்டிருருக் கிறார்கள்.விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலையின் செயல்அலுவலர் செந்தில் குமாரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “பல்வேறு புள்ளி விபரங்களைக் கூறி ஆலையை இயக்குவதற்கு சாத்தியமில்லை” என்ற தன்மையில் பதிலளித்தார்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் ஆலையை பாதுகாத்து இந்தாண்டு இயக்க நடவடிக்கைஎடுப்பார்களா? பாக்கிப் பணம் பெற்றுத்தருவார்களா? என கேள்வியெழுப்பி னர் போராட்டத்தில் பங்கேற்ற விவ சாயிகள்.