தமிழ்மண்ணிற்கு பெருமையையும் புகழையும் சேர்க்கும் பல்வேறு பழந்தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து வருகின்றன. அவை ஒவ்வொரு வகையில் தங்கள் பழம்பெருமைகளை கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெறும் 600 ஆண்டுகள் பழம்பெருமைமிக்க மிகச்சிறப்பான ஒரு பழந்தமிழர் பண்பாட்டு நிகழ்வு என்பது குருநாதசாமி ஆடிப்பெருந் தேர்த்திருவிழா ஆகும். இது அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் (ஆடி) இரண்டாம் வாரம் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா என தென்மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் நான்கு நாட்களும் இத்திருவிழாவில் மக்கள் பங்கேற்பார்கள். இத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட மூன்று பெரியத்தேர்களில் நாட்டார்வழக்காறு தெய்வங்கள் மூன்றின் உருவச்சிலைகளை வைத்து ஒவ்வொருத்தேரிலும் உருளை வடிவிலான பெரும் நான்கு மரத்தண்டிகள் கட்டப்பட்ட அந்த மூன்றுத்தேர்களையும் நூற்றாண்டுகள் கடந்தும் பலதலைமுறைகளாக தங்கள் தோள்களில் உற்சாகமாக இப்பகுதியின் உழைப்பாளிகள், விவசாயிகள் சாதிவித்தியாசமின்றி இரண்டு கிலோமீட்டர் தூரம் தூக்கிச்சென்று மீண்டும் திரும்ப கொண்டுவருவது தமிழகத்தில் வேறெங்குமில்லாத நிகழ்ச்சி.
இத்திருவிழாவின் தனிச்சிறப்பே இங்கு நான்கு நாட்கள் கூடும் மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தைதான். இங்கு கூடும் மாட்டுச்சந்தை முந்நூறு ஆண்டுகளுக்கும்மேல் பழமையானது. பழங்காலத் தமிழர்களின் பண்டமாற்றுமுறை காலத்திலேயே இது உருவாகி இருக்கும் என்று தொன்னூறு வயதைத் தாண்டிய பெரியவர்கள் வாய்மொழி வரலாறாக கூறுகிறார்கள். இந்தியாவின் மிகப்பழைமையான கால்நடைசந்தைகளுள் முதன்மையானது இதுதான். இந்த மாட்டுச்சந்தையில் கிடைக்காத மாட்டு இனங்களே கிடையாது. நாட்டுமாடு, ஜல்லிக்கட்டு மாடு, காங்கேயம் காளை, சிந்துமாடு, ஜெர்சிமாடு போன்ற பல்வேறு மாட்டினங்களுடன் மிகவும் கடினமாக உழைக்கும் திறன்மிக்க விவசாயிகளின் தோழனாக விளங்கும் பர்கூர் மலையின மாடுகள் இங்கு ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வரும்.
அடுத்து இத்திருவிழாவின் புகழை உச்சிக்கு கொண்டுச்செல்வது இங்கு கூடும் குதிரைச்சந்தை ஆகும். மைசூரை ஆண்ட புகழ்மிக்க வீரன் திப்புசுல்தான் ஆளுகைக்கு உட்டபட்ட பகுதிகளுள் அந்தியூரும் ஒன்று, குதிரைப்பிரியரான அவர் இப்பகுதிக்கு வரும்போது அவருக்கு விற்பதற்காக குதிரை வியாபாரிகள் குதிரைகளைக்கொண்டு வந்தபோது துவங்கியதுதான் இந்த குதிரைச்சந்தை என்கிறார்கள் இங்குள்ள மிகமூத்த குடிமக்கள். இந்த குதிரைச்சந்தையில் நாட்டுக்குதிரைகள், புகழ்பெற்ற பந்தையக்குதிரைகள், விலை உயர்ந்த கத்தியவார், மார்வார் மற்றும் குஜராத், ராஜஸ்தான் குதிரைகள் என எல்லாரகமான குதிரைகளும் விற்பனைக்கு வரும். ராசிச்சுழி உள்ள குதிரை மற்றும் பந்தையக்குதிரை ஆகிவற்றின் விலை பல லட்சங்களில் பேரம்பேசுவது இங்கு சர்வசாதாரணம். மாடு, குதிரை வண்டிகளுக்குத் தேவையான பழங்காலம் முதல் நவீனகாலம் வரை உள்ள அனைத்து உதிரிப்பாகங்களும் இங்கு கிடைக்கும்.
இத்தோடு இங்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் மிகநீளமான பல்பொருள் விற்பனையாகும் தற்காலிக கடைவீதி சிறுநகரம்போல் அமையும், இங்கே எல்லாவிதமான அன்றாடம் நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் கிடைக்கும். பழங்கால வீட்டு உபயோக பொருட்கள் இங்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் இதற்கு பெண்கள் மத்தியில் உள்ள மவுசு எப்போதும் குறைவதில்லை. தெருக்கூத்து, பொம்மலாட்டம், சர்க்கஸ், மாயாஜால வித்தைகள், மிகப்பெரிய ராட்சசராட்டிணங்கள், கண்காட்சிகள், மரணக்கிணறு என பொழுதுபோக்கு நிகழ்வுகள் இங்கு ஏராளம். தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கவேண்டிய காலத்தால் அழியாத அற்புதமான பழந்தமிழர் பண்பாட்டுச்சின்னம் அந்தியூர் தேர்த்திருவிழா என்றால் அது மிகையல்ல.