அசாம் மாநிலத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தின் சக்லா கிராமத்தில் கடந்த 29-ஆம் தேதியன்று, 12 வயது சிறுமி ஒருவர் மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதை அடுத்து, கோக்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை பார்ட்டிக்கு 10 வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. இந்த நிலையில், அந்த மாணவர்களை போலீசார் தேடி வந்தனர். இதனை அறிந்த 7 மாணவர்கள் தப்பி ஓடிய நிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 7 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.