நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரிக்கை விடுத்த “இந்தியா” கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 146 எம்பிக்களை இடைநீக்கம் செய்து தங்களுக்கு சாதகமான மசோதாக் களை நிறைவேற்றிக் கொண்டது மோடி அரசு. இடைநீக்கத்தை கண்டித்து “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்திய பொழுது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தன்னை போல “மிமிக்ரி” செய்ததாகவும், ஜாட் இன மக்களை அவர் இழிவுபடுத்தியதாகவும் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் குற்றம்சாட்டி பிரச்சனையை திசைதிருப்பினார். நாடாளுமன்ற விவகாரத்தில் சாதியைப் பற்றி பேசுவது மரபில் இல்லாதது என “இந்தியா” கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சாக்சி மாலிக், ராகேஷ் திகாயத் ஜாட் இனத்தவர்கள் தானே, அவர்களை பாஜகவினர் அவமானப்படுத்திய பொழுது துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் எங்கே சென்றார்? என ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி உதய்பன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”மிமிக்ரி சம்பவம் தொடர்பாக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், ஜாட் இனத்தவர்களை நினைவு கூர்கிறார். ஆனால் ஓராண்டுக்கு முன்னர் நாட்டின் விவ சாயிகள் தில்லி எல்லையில் போராடிய பொழுது, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் விவசாய நலன் தொடர்பாக கண்களில் கண்ணீர் மல்க பேசிய போது பாஜகவினரால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். அதே போல மல்யுத்த போராட்டத்தின் பொழுது இந்தியாவின் மகள் சாக்சி மாலிக் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு அவமானப்படுத்தப் பட்டார். ராகேஷ் திகாயத் மற்றும் சாக்சி மாலிக் இருவரும் ஜாட் இனத்தவர் என்ற நிலையில், இருவரும் அவமானப்படுத்தப்பட்ட பொழுது துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எங்கே சென்றார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.