மும்பை, ஜன. 7 - திங்கட்கிழமை துவங்கி வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில், மும்பை பங்குச் சந்தை குறியீடு 940 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தது. இதனால், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகளில், வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வர்த்தக வாரத்தின் முதல் 2 வர்த்தக நாட்களில் (திங்கள் மற்றும் செவ்வாய்) வர்த்தகம் சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த புதன் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 3 வர்த்தக நாட்களும் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.
அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அந்நிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால், மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. கடந்த வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 30) பங்கு வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ. 282 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக இருந்தது. அது, ஜனவரி 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரூ. 279 லட்சத்து 78 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது. அதாவது, ஒரே வாரத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர். டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 9 காசுகள் சரிவு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பில் வெள்ளிக்கிழமையன்று 9 காசுகள் அளவிற்கு சரிவு ஏற்பட்டது. வியாழனன்று 82 ரூபாய் 62 காசுகளாக இருந்த, டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளியன்று 9 காசுகள் சரிந்து, 82 ரூபாய் 71 காசுகளுக்கு சென்றது. இந்திய சந்தைகளிலிருந்து அந்நிய முதலீடுகளின் வெளி யேற்றம், பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவையே ரூபாய் மதிப்பு சரிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன.