states

img

மகாராஷ்டிராவில் குளத்தில் துணிதுவைக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 5 பெண்கள் பலி  

மகாராஷ்டிராவில் குளத்தில் துணிதுவைக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.  

மகாராஷ்டிரம் மாநிலம் லத்தூர் மாவட்டம் துல்ஷிராம் தண்டா கிராமத்தில் இன்று காலை குளத்தில் துணி துவைக்க 5 பெண்கள் சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைக்கும் போது பெண் ஒருவர் குளத்தில் கால் தவறி விழுந்து மூழ்க ஆரம்பித்துள்ளார். இதனைக் கண்ட மற்ற பெண்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது ஒருவர் பின் ஒருவராக அனைவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர்.  

இந்த விபத்தில் ராதாபாய் தொந்திபா ஆடே (45), அவருடைய மகள்கள் தீக்‌ஷா (20), காஜல் (19), சுஷ்மா சஞ்சய் ரத்தோட் (21) மற்றும் கங்காதர் ரத்தோட் (25) ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மகாராஷ்டிரத்தின் பர்பானி மாவட்டம் மற்றும் மொஜ்மாபத் தண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் என கிங்காவோ காவல்நிலையத்தினர் தெரிவித்தனர்.  

விசாரணையில்  இந்த 5 பெண்களும் கடந்த 5 மாதங்களாக அகமத்பூர் கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஊர் ஊராக கரும்பு வெட்டும் வேலை தேடி செல்வது வழக்கம் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. 

முன்னதாக கடந்த வாரம் மும்பையின் தொம்பிவ்லி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குளத்தில் துணி துவைக்க சென்ற போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

;