states

கர்நாடகத்தில் இந்து மாணவியுடன் பழகிய முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்!

பெங்களூரு, ஜன. 11 - பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், இந்து மாணவி யுடன் பழகியதற்காக முஸ்லிம் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குக்கே சுப்ரமண்யா பகுதியை சேர்ந்த 17 வயது இந்து மதத்தைச் சேர்ந்த மாணவியும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அபீத் என்ற இளைஞரும் ஒன்றாக பழகி வந்ததாக கூறப்படு கிறது. அந்த வகையில், இருவரும் பல்வேறு இடங்களுக்கு  ஒன்றாக செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று குக்கே சுப்பிரமணியா கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர், அந்த கோயிலின் பேருந்து நிறுத்தம் அருகே இரு வரும் ஒன்றாக நின்றுள்ளனர். இதனை இந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.

பின்னர், அவர்க ளை குமாரதாரா நதி வரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற அவர்கள், ஒருகட்டத்தில், இளைஞர் அபீத்தைச் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் இளைஞர் அபீத் படுகாயம் அடைந்துள்ளார். போலீசார் அபீத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பின்னர், அபீத் அளித்த புகாரின் பேரில், அவரைத் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மறுபுறத்தில், தனது மகளை கடத்திச் சென்றதாக இந்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், முஸ்லிம் இளைஞர் அபீத் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும், இதே தட்சிண கன்னடா பகுதியில் வேறு மத இளைஞருடன் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பேருந்தில் ஒன்றாகப் பயணித்ததாகக் கூறி, சிலர் பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.