பெங்களூரு, டிச. 30 - கர்நாடக சட்டமன்றத்தைத் தொடர்ந்து, ஹிண்டல்கா சிறை யிலும் சாவர்க்கரின் படத்தை, அம்மாநில பாஜக அரசு திறந்துள்ளது. இந்தியாவில் பிரிவினை மற்றும் மதவெறுப்பு அரசியலை விதைத்தவர்களில் முதன்மையானவர் வி.டி. சாவர்க்கர். கோட்சேவின் குருநாதரான இவர், மகாத்மா காந்தி படுகொலை யிலும் கைது செய்யப்பட்டு, பின்னர் போதிய சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தால் தண்டனையிலிருந்து தப்பியவர். முன்னதாக விடுதலைப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் 5 முறை தொடர்ச்சியாக மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து சிறையிலிருந்து விடுதலையானவர். இனிமேல் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவமாகவே இருப்பேன் என்று உறுதியளித்து, தனது இறுதிநாள் வரை அப்படியே இருந்தவர். இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியமும் பெற்றவர்.
ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, வி.டி. சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரர் என்று கூறிக்கொள்ளும் பாஜக-வினர், இந்த வரலாற்றுப் புரட்டை பாடப் புத்தகங்களிலும் திணித்து வருகின்றனர். குறிப்பாக, கர்நாடக பாஜக அரசு இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த டிசம்பர் 19 அன்று கர்நாடக சட்டப்பேரவைக்குள் வி.டி. சாவர்க்கரின் படத்தையும் திறந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தியும் பசவராஜ் பொம்மை அரசு தனக்குள்ள ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பைச் சமாளித்தது. இதனிடையே, பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படம் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ், சாவர்க்கரின் புகைப்படத்தை திறந்து வைத்துள்ளார். மேலும், “சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். இந்து மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். ஹிண்டல்கா சிறையில் கடந்த 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி வரை அடைக்கப்பட்டிருந்தார். சாவர்க்கர் 99 நாட்கள் இங்கு இருந்ததை நினைவுக்கூரும் வகையிலேயே தற்போது படம் திறக்கப்பட்டுள்ளது’’ என்றும் பேசியுள்ளார்.