நபிகள் நாயகத்தை அவமதித்த பாஜக தேசிய செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
இஸ்லாமியர்களின் இறைதூதராக முகமது நபிகள் நாயகம் கருதப்படுகிறார். இந்நிலையில், பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். மேலும், பாஜகவின் தில்லி மாநில ஊடக பிரிவுத்தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே குவைத், ஈரான் போன்ற நாடுகள், நபிகள் குறித்து அவதூறு பரப்பிய இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்றன.
இந்நிலையில், உலக அளவில் இந்தியாவிற்கு கலங்கம் ஏற்படுத்திய பாஜகவிரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தனது வஞ்சகம், ஆணவம், பெருமை ஆகியவற்றில் வெகுதூரம் சென்று, அதன் சொந்த இருளில் குருடாகி விட்டது. பாஜகவின் செயல்களுக்கான விளைவுகளை கட்சிதான் ஏற்க வேண்டும் நாடு அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாஜகவின் சமூகவிரோதிகள் தேசத்தை வெறுப்பு நெருப்பில் தள்ளுவதாகவும், சர்வதேச அளவில் நாடு இழிவுபடுத்தப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. எனவே, பாஜகவின் இத்தகைய சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சீத்தாராம் யெச்சூரி
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது ட்டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, பாஜகவினர் இத்தகைய வெறுப்பு பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பு கூறுகளை சிதைக்கக்கூடாது. ஒன்றிய மோடி அரசு, இத்தகைய மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொல்.திருமாவளவன் எம்.பி.,
அரபு நாடுகளில் எழுந்த எதிர்ப்பையொட்டி நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைப்பதாக பாஜக தலைமை அறிவிப்பு செய்து இருக்கிறது. ஆனால், நூபுர் சர்மாவோ பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் அனைவரும் தனக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அவர்கள் எல்லோரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாகச் சொன்னது அரபு நாடுகளை ஏமாற்றுவதற்காகச் செய்த தந்திரம்தான் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பையோ, தலைகுனிவையோ நீக்குவதாக இல்லை.
உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி, மதரீதியாகப் பதற்றத்தை உருவாக்கி மிகப்பெரிய வன்முறை கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ள பாஜக நிர்வாகிகள் இருவரையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “எந்த மதம் குறித்து பேசும்போதும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த விஷயத்தில் பாஜகவும் தனது கட்சியினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அவர்களை (நபிகளை விமர்சித்தவர்களை) தற்காலிக நீக்கம் செய்து வெளியேற்றுவது மட்டுமே பலனளிக்காது. அவர்களை கடுமையான சட்டங்களின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும். அனைத்து மதங்களையும் மதிப்பது நாட்டுக்கு அவசியம்” என்று கூறியுள்ளார்.