தில்லியிலிருந்து பஞ்சாப் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
உலகின் மிகப்பெரிய பொதுத்துறைகளில் ஒன்றாக இந்திய ரயில்வே விளங்குகிறது. 130 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட இந்திய ரயில்வேயில், கடந்த சில காலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஒடிசா அருகே கோரமண்டல் விரைவு ரயில் தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்து. இந்த கோர விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்துடன், சுமார் 10 விபத்துகள் கடந்தாண்டு மட்டும் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஓராண்டு கழித்து அதே நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாப்பில் சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று தில்லியில் சரிதா விஹார் காவல்நிலையம் அருகே, தில்லியிலிருந்து பஞ்சாப் சென்ற தாஜ் விரைவு ரயிலின் 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து, ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.