வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தி தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''குறுகியகால வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் மாற்றமில்லாமல் தொடரட்டும். அதாவது தொடர்ந்து 4 சதவீதமாகவே தொடரட்டும் என்று நிதிக்கொள்கைக் குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவே தொடரும்.
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரெப்போ ரேட் வீதத்தை மார்ச் மாதத்திலிருந்து 115 புள்ளிகளைக் குறைத்துள்ளோம்.
நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. 2-வது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணித்தோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தப் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். இதற்கு முன் மைனஸ் 9.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனக் கணித்திருந்தோம்.
3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.1 சதவீதமும், கடைசிக் காலாண்டில் 0.7 சதவீதமும் வளர்ச்சி அடையக்கூடும். நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் சாதகமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்''.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.