states

img

12 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி

புதுச்சேரி, மார்ச் 16- புதுச்சேரியில் 12 வயது மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ரங்கசாமி துவங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து தப்பிக்க பெரியவர்களுக்கு   முதல்கட்டமாக இரண்டு தவணை தடுப்பூசி  போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறியவர்களுக்கும் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி (கார்பி வாக்ஸ்) செலுத்தும் திட்டம் கதிர்காமம் இந்திராகாந்தி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதனன்று (மார்ச் 16) நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை சுமார் 90 விழுக்காடு பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.