states

img

பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலி  

பீகாரில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்று, மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டத்தில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பேரிடர் மேலாண் கழகத்தின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும், வானிலை மோசமடைந்துள்ள சூழலில், மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை மின்னல் தாக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது.  

2001 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் 42ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31 வரையில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக பீகாரில் 401, உ.பி.யில் 238, மத்தியப்பிரதேசத்தில் 228, ஒடிசாவில் 156, ஜார்க்கண்டில் 132 பேர் பலியாகினர்.

;