ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் இன்று காலமானார்.
ஈநாடு ஊடக குழுமங்களின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவருமான ராமோஜி ராவ் (88) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில், பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் டெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.