states

img

தீக்கதிர் உலக செய்திகள்

காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயலுக்கு இங்கிலாந்து கண்டனம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாகனத்தின் முன் புகுந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயலுக்கு இங்கிலாந்து  வெளியுறவுத்துறை அமைச்சகம்  கண்டனம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கிருந்து திரும்பினார். பாதுகாப்பு வாகனங்களுடன் ஜெய்சங்க ரின் காரும் அணிவகுத்துச் சென்றபோது அப்பா தையில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொடியுடன் புகுந்து அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது ஒருவர் கொடியுடன் வாகனங்களை மறித்து நின்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் அதிகாரிகள் அவர்களை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

 இது மிக மோசமான செயல் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்தன. இந்திய அரசும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜெய்சங்கர் நலமுடன் உள்ளார். ஒரு சில நிமிடங்களிலேயே அந்த சூழல் சரிசெய்யப்பட்டுவிட்டது என அம்மாநகர காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் பொது நிகழ்வுகளை அச்சுறுத்துகின்ற எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம்  கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து ஆதரிக்கும். அதே வேளையில், பொது நிகழ்வுகளை அச்சுறுத்து கின்ற அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களது  பாதுகாப்பு வாகனங்கள் வந்தபோது ஏற்பட்ட நிலைமையை சரிசெய்ய காவல்துறையினர் விரைவாகச் செயல்பட்டனர். எங்கள் சர்வதேச கடமைகளுக்கு உட்பட்டு எங்கள் நாட்டிற்கு வருகின்ற அனைத்து நாடுகளின் அதிகாரிகளின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்கு  நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ்க்கு  மூன்றாவது வாரமாக சிகிச்சை  

நிமோனியா தொற்றால் நுரையீரலின் இரண்டு பக்கமும் பாதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் மூன்றாவது வாரமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை மோசமான போது அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த  மூன்று நாட்களாக அவரது உடல் நிலை சீராக உள்ளது என தற்போது மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் போப் தனக்காக வேண்டிக்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென் கொரிய  ஜனாதிபதி விடுதலை 

தென்கொரியாவின் ஜனாதிபதி  யூன் சுக் யோலை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணுவ ஆட்சியை அமல்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர்மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவதற்கு முன் சிறையில் வைத்திருக்க வேண்டிய கால அளவு முடிந்ததால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததால் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.  

ஏப்ரல் மாதம் வரை  வரிவிதிப்பை நிறுத்துகிறார் டிரம்ப் 

மெக்சிகோ, கனடா நாடுகளின் மீது 25 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டிய டிரம்ப்  தற்போது வரிவிதிப்பை ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பதற்கு கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப் மிரட்டலை தொடர்ந்து அமெரிக்கா அல்லாத சந்தையை நோக்கி நகர  மெக்சிகோ திட்டமிட்டது. கனடாவும் அமெரிக்கா மீது வரியை அறிவித்தது. அமெரிக்க வாகன உற்பத்தி முதலாளிகளும் பொருளாதார நிபுணர்களும் இந்த வரிவிதிப்பு அமெரிக்கர்களையே பாதிக்கும் என எச்சரித்தனர். இந்நிலையில் வரி விதிப்பு தள்ளிவைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. 

அமெரிக்க - உக்ரைன்  அதிகாரிகள் விரைவில் சந்திப்பு

வரும் வாரம் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சந்திப்பும் சவூதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் நடக்க உள்ளது. போர் நிறுத்தத்திற்கு தான் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்தச் சந்திப்பில் உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு கொடுக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம்  என கூறப்படுகின்றது. 

புலம்பெயர்ந்தோர் பயணித்த  படகு கவிழ்ந்து விபத்து

ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையால் ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்து சென்ற மக்களின் 2 படகுகள் ஏமன் கடல் பகுதியில் கவிழ்ந்துள்ளன. இந்த விபத்தில் சுமார் 181 புலம் பெயர்ந்தோர் மற்றும் 5 பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் என அதிர்ச்சித் தகவலை ஐநா தெரிவித்துள்ளது.இரண்டு பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா என அச்சம் எழுந்துள்ளது.