சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்
வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலை போராட்டம் முடிவுக்கு வந்த பொழுது நமது பன்மைத்தன்மையை பறைசாற்றும் வகையில் செங்கோல் போன்று பல பரிசுகள் நமது தலைவர்களுக்கு தரப்பட்டன. இது நமது வரலாற்றின் செழுமையான பாரம்பரியத்தை பறைசாற்றியது. இவை அருங்காட்சியகங்களில் பத்திரமாக பாதுகாக்கப்பட தகுதி வாய்ந்தவை. அதனைதான் நேருவும் செய்தார்.
ஜனநாயகம் என்பது அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு. அனைத்து மக்களும் மதம்/சாதி/இனம்/பாலினம் வேறுபாடு இல்லாமல் சமமானவர்கள். அரசை அரசாங்கம் நிர்வகிக்கிறது. அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்கின்றனர். இந்த ஜனநாயகத்தை மோடி சிதைத்து ஜனநாயகம் இல்லாத மன்னராட்சி காலத்தில் இருந்த செங்கோல் எனும் அடையாளத்தை முன்னெடுக்கிறது.
செங்கோல் என்பது சோழர்களின் சாம்ராஜ்யத்தில் மதகுருவால் மன்னனுக்கு அளிக்கப்படுவது. தன் கீழ் உள்ள மக்களை ஆள்வதற்கு மன்னனுக்கு உள்ள உரிமை தெய்வத்தால் அங்கீகரிக்கப்பட்டது எனும் பிம்பத்தை உருவாக்குவது இதன் நோக்கம்.
செங்கோலை அருங்காட்சியகத்திலிருந்து கொண்டு வந்து மோடிக்கு தருவது என்பது ஆள்வதற்கு தெய்வீக அங்கீகாரம் உள்ளது என நிலைநாட்டும் முயற்சி. அதனை புதிய நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்துவது ‘அரசு-குடி மக்கள்’ எனும் ஜனநாயகத்தை சிதைத்து ‘மன்னன்- மன்னனால் ஆளப்படுபவர்கள்’ எனும் ஜனநாயகமற்ற தன்மையை நோக்கி பின்னுக்குப் போவது என்பதன் அடையாளம்.