புதுதில்லி, ஏப். 26- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து மல்யுத்த சம்மேளனம் அமைதி காத்ததால் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு வாரம் நீடிக்க பதறிய ஒன்றிய அரசு, இந்திய முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. மேரி கோம் தலைமையிலான ஆணையம் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்த பின்பும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அமர்வு, வழக்கறிஞர்களின் வாதத்திற்கு பின்பு,”சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதனால் மனு தொடர்பாக பதில் அளிக்க தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வெள்ளியன்று பட்டியலிட வேண்டும். மேலும் மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்” என உத்தரவிட்டது.