புதுதில்லி, டிச. 19 - உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நிய மனம் விஷயத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்புடன், ஒன்றிய பாஜக அரசு மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறது. நீதிபதி களை நியமிப்பதற்கு அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று கூறி, கொலீஜியம் பரிந்துரைகளை நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசு - உச்சநீதிமன்றம் இடையிலான இந்த மோதல், அரசியலமைப்புச் சட்ட சிக்கலாக மாறும் சூழலும் எழுந்துள்ளது. இந்நிலையில், நீதித்துறையை காவிமயமாக்கவும், இந்துத்துவா சித்தாத்தம் கொண்டவர்களை நீதிபதிகளாக நியமிப்பதற்காக வுமே, ஒன்றிய பாஜக அரசு, கொலீஜியத்தை எதிர்ப்பதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ‘மிரர் நவ்’ செய்தி ஊடகத்திற்கு கபில் சிபல் பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளையும், ஒன்றிய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு போய் விட்டது. எல்லா துறைகளிலும் அவர்களுடைய சித்தாந்தம் கொண்ட ஆட்கள்தான் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் நீதித் துறையைக் கைப்பற்றி, அதிலும் பாஜக-வினருக்கு தேவையான ஆட்களை நியமித்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும்.
ஆளும் பாஜக-வின் சித்தாந்தத்தை (இந்துத்துவா) கொண்டவர்கள்தான் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக இருக்கிறார்கள். மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கிறார்கள். அதேபோல அமலாக்கத்துறை, வரு மான வரித்துறை, சிபிஐ என அனைத்திலும் இவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் அனை வரும் பாஜக புகழ் பாடி வரு கிறார்கள். இந்த வரிசையிலேயே நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மையுடன் இருப்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் உள்ளது.
தற்போது இருக்கும் கொலீஜியம் முறை குறித்து, மாற்றுக் கருத்து இருக்கிறது. கொலீஜியம் முறை சட்டத்திற்கு உட்பட்டதுதான். அதேநேரம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. கொலீஜியத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் தங்க ளுக்கு தெரிந்த நெருக்கமான வர்களை நீதிபதிகளாக நிய மித்துள்ளதாக அவர்கள் மீது விமர்சனங்கள் உள்ளன. ஆனால், ஒன்றிய அரசு நேரடியாக நீதிபதி களை நியமிப்பதை விட, கொலீஜி யம் முறை சிறந்தது. எனவே, நீதித்துறையை கைப்பற்றுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ஜனநாயகத்தின் கடைசி கோட்டை நீதிமன்றம்தான். அதுவும் கைப்பற்றப்பட்டுவிட்டால் ஜனநாயகத்தில் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விடும். தற்போது உள்ள அமைச்சர்கள், சட்ட அமைச்சர் உட்பட பலரும் பட்டம் மட்டுமே பெற்றிருக்கின்றனர். அவர்கள் பயிற்சி செய்வதில்லை. இதனால் வழக்கறிஞர்கள் குறித்து அவர்களுக்கு தெரியாது. இன்றைய வழக்கறிஞர்கள்தான் நாளைய நீதிபதிகள். இந்நிலையில், நீதி மன்றம் காவி மயமாக்கப்படுவதை நாங்கள் (வழக்கறிஞர்கள்) விரும்ப வில்லை.” இவ்வாறு கபில் சிபல் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.