states

img

ஷேக் ஹசீனா மீது மீண்டும் கைது உத்தரவு

டாக்கா, ஜன.6- முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வங்கதேச நீதிமன்றம் இரண்டாவது முறையாக கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது. பலவந்தமாக பலர் காணாமல் ஆக்கப்பட்டதில் ஷேக் ஹசீனாவுக்கு  பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 2024  ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடுதழுவிய போராட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடையவேண்டிய சூழல் உருவானது.   போராட்டத்தின் போது நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஹசீனாவை கைது செய்ய  அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கைது உத்தரவை பிறப்பித்தது. அது மட்டுமின்றி ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் பலர் மீது தொடர்ந்து வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது என்ற பழிவாங்கும் நடவடிக்கையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஈடுபட்டுள்ளது. மற்றொரு புறம் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உள்ளிட்ட வங்கதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தலைவர்களை விடுதலை செய்து வருகிறது. ஆனால் அந்நாட்டில்  பல சிறுபான்மை இன மக்களின் மீது நடக்கும் தாக்குதல்களை இடைக்கால அரசு கட்டுப்படுத்தவும், சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும் தவறி வருகிறது.  எனினும் ஷேக் ஹசீனாவை கைது செய்து இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என பிடிவாதமாகக் கூறி வருகிறது இடைக்கால அரசு. இந்நிலையில் தான்  உள்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICT) தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கில் இரண்டாவதாக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.