states

பணமதிப்பு நீக்க துயரத்தை ஏற்படுத்தியவர்கள் மக்கள் மன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்..!

புதுதில்லி, ஜன. 3 - 2016-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற நீதிபதிகளின் பெரும்பான்மை கருத்து அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது. அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும், “ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 26(2)-இன் படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதன் மூலமாகவே செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக, ஒன்றிய அரசு ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாக, பணமதிப்பு நீக்கம் செய்தது சட்டவிரோதம்” என மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். எனினும், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததால், ஆடித் தீர்த்த பாஜக தலைவர்கள், “முன்பு பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக எதிர்க்கட்சித்தலைவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?” என்று கேள்வி எழுப்பினர்.  இதற்கு, பணமதிப்பு நீக்க துயரத்தை ஏற்படுத்தியவர்கள் நீதிமன்றத்தில் தப்பினாலும், மக்கள் மன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான தாமஸ் ஐசக், “பணமதிப்பு நீக்கம் சட்டப்பூர்வமானது என்ற உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை முடிவானது, இந்தியாவின் 8 சதவிகித வளர்ச்சியை முறியடித்த இமாலயத் தவற்றை பற்றி பேசவில்லை, இதன் விளைவாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட ரூ. 15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது மற்றும் மக்களுக்கு பயங்கர துன்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த பேரழிவுகரமான (பணமதிப்பு நீக்க) முடிவு எடுக்கப்பட்டபோது கூறப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நவம்பர் 8, 2016 அன்று பணமதிப்பு நீக்கம் அறிவிப்பதற்கு முன், ரிசர்வ் வங்கி சட்டம், 1934-இன் பிரிவு 26(2) சரியாகப் பயன்படுத்தப்பட்டதா இல்லையா? என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்பதை பாஜக-வினருக்கு சுட்டிக் காட்டியுள்ளார். “பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மங்கி வருகிறது…

2022-இல் இந்தியாவின் தரவரிசை 12 குறியீடுகளில் சரிந்துள்ளது. எட்டரை ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் தோல்விகளுக்கு 2022-ஆம் ஆண்டு ஒரு ஊமை சாட்சியாக இருந்து வருகிறது” என்று தெலுங்கானா மாநில ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது. மேலும், பிஆர்எஸ் தலைவரும், கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளருமான ஒய். சதீஷ் ரெட்டி, ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கையின் பின்விளைவுகள் குறித்த பல்வேறு செய்தி அறிக்கைகள் கொண்ட வீடியோ தொகுப்பை பகிர்ந்து, “இந்த பேரழிவு பணமதிப்பு நீக்கத்தால் இழந்த உயிர்களை எதுவும் ஈடுசெய்ய முடியாது!” என்று சாடியுள்ளார். “பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக பேசியதற்காக நீதிபதி பி.வி. நாகரத்னா மீது மிகுந்த மரியாதை கொள்கிறேன்” என்று சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.