காதலியை கவர காதலன் பேசுகிற பொய்களை ஜீரணிக்க முடியாமல் பெண் ஒருவர் பாடுவது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது… பாடலின் வரிகள் இப்படித்தான் ஆரம்பிக்கிறது… “அய்யோ சாமி நீ எனக்கு வேணாம்… பொய்பொய்யா பேசி ஏமாத்தினது போதும், மனசாட்சியை நீ விலை பேசினாய்… நீ சொல்லு நீ மனுசனா” என்பதாய் வரிகள் நீள்கின்றன. இந்தப் பாடலின் வரிகளை வாயில் வடை சுடும் பிரதமர் மோடியை கண் முன் நிறுத்தி பாடித்தான் பாருங்களேன். நூறு சதவிகிதம் பொருந்திப்போகும். அத்தனை பொய்களையும் பட்டியலிட முடியாது என்பதால், மோடி சுட்ட வடை என்கிற பெரிய புத்தகமே வெளிவந்திருக்கிறது. வாக்குச்சா வடிக்கு போவதற்குள் இதனைப் படித்துவிடுவது நாட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
முதல் வடை
2014இல் தேர்தல் பரப்புரையில் மோடி சுட்ட முதல் வடை சுவிஸ் வங்கிகளில் உள்ள அனைத்து கறுப்புப் பணமும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும்; கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்; சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், ரூ.15 லட்சம் போடுவேன் என்பது தான். சுவிஸ் வங்கி கணக்கை வெளியிடுவேன் என்று சொன்ன அதே மோடி தான் இன்று எஸ்பிஐ வங்கியின் கணக்கைக்கூட வெளியிட மறுக்கிறார். ஜவுளித் தொழில் மீது கடும் தாக்குதல் 2014 ஏப்ரல் 14 அன்று ஈரோட்டில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ஈரோடு ஜவுளி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவேன், பொது சுத்திகரிப்பு நிலை யங்கள் அமைக்கப்படும் என்கிற வாக்குறுதியை கொடுத்தார். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு 2021இல் 5 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தி லட்சக்கணக்கான ஜவுளி தொழில் சார்ந்தவர்களை திணறடித்தார். இதனை கண்டித்து ஈரோட்டில் ஒருநாள் கடை யடைப்பு போராட்டமும் நடைபெற்றது. 2022 மே மாதத்தில் பருத்தி விலை நூல் விலை கடுமையாக உயர்ந்ததால் ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மாவட்டங்களில் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டங்கள் மோடி அரசைக் கண்டித்து நடை பெற்றது. இன்றும் ஈரோட்டில், சாயக் கழிவுகளால் ஆறுகள் மாசடைந்து இருக்கிறது. மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சியில் ஈரோட்டில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம் இதுவரை செயல் படுத்தப்படவே இல்லை என்பதே நிதர்சனம்.
கடலில் உருட்டப்பட்ட மீனவர்கள்
இதேபோன்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை சேட்டிலைட் மூலமாக கண்டறிந்து, அது தொடர்பாக தகவல் மீனவர்களின் செல்போன்களுக்கு குறுஞ் செய்தியாக அனுப்பப்படும்; மீனவர்கள் அங்கும் இங்கும் அலையாமல், மீன் அதிகம் இருக்கும் இடத்திற்கு சென்று அதிக மீன்களை பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம் என உருட்டினார். கப்பலில் வந்த ரசாயனம் கொட்டியபோது வாளி யைக்கொண்டு அள்ளி இரைத்த கனவான்கள் தான் இவர்கள் என்பதை நாடறியும். 2017இல் ஒக்கி புயலில் கன்னியாகுமரி மீனவர்கள் காணாமல் போனபோது அவர்களைத் தேடுவதற்கு கூட நவீன கருவி இல்லாமல் கடல் நடுவே தத்தளிக்க விட்டவர் கள்தான் இவர்கள். இன்னும் சேட்டிலைட் என்ன வானது என்றே தெரியாமல் மீனவர்கள் குறுஞ் செய்திக்காக காத்து கொண்டிருக்கிறார்கள் கடல் நடுவே.
அம்பலப்படுத்திய கல்வி அமைச்சர்
2023 மே 16ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் (சப்கா ரோஜ்கார் - அனைவருக்கும் வேலை) என்கிற நிகழ்வில் மோடி பேசுகையில், நாடு முழுவதும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறு வனங்களை உருவாக்கி வருகிறோம்; 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் உருவாக்கி வரு கிறோம் என உருட்டினார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஐஐடியோ, ஐஐஎம்களோ ஏதும் திறக்கப்படவில்லை என மாநிலங்களவை யில், 2023 ஜூலையில் கல்வி அமைச்சர் பதிலளித்தது ஹைலைட்.
விவசாயிகளின் விரோதி
2014ல் மராட்டியத்தில் பேசும்போது, கிரிக்கெட் பற்றி பேச நேரம் இருக்கும் வேளாண்மை துறை (அன்றைய) அமைச்சர் சரத் பவாருக்கு, உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் கோரிக்கை களை காது கொடுத்து கேட்பதற்கு நேரமில்லை என்றார் மோடி. இப்போதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மோடியோ குஜராத்தில் உள்ள பேரா ஸ்டேடியத்தை இடித்து விட்டு 100 கோடி ரூபாய் செலவில் கிரிக்கெட் மைதானம் கட்டி அதற்கு நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயரிட்டு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார். (அந்த ஸ்டேடியத்தின் இலட்சணம் என்னவென்றால், ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடந்த போது, பெய்த மழையால் கூரையைப் பிய்த்துக்கொண்டு மழைநீர் ஒழுகியதும், மைதானத்திற்குள் புகுந்த நீரை வெளியேற்ற, காயவைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ், ஸ்பான்ச் போன்ற ‘நவீன கருவி களை’ பயன்படுத்தினர் என்பதுதான். இந்த மோடியின் ஆட்சியில்தான், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லி யில் போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளை அழைத்து பேசாமல், சாலையில் ஆணிகள் அடிப்பது, தடுப்புகள் அமைப்பது, ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசுவது, தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, தலைநகரின் அனைத்து வாசல் களையும் பூட்டிவைப்பதும், விவசாயிகளை அடித்து நொறுக்குவது, ஆயிரக்கணக்கான வழக்குகளை தொடுப்பது என அதிகார ஆண வத்தில் ஆடித் திளைக்கின்றனர். பத்தாண்டுகளாக எதுவும் செய்யாமல், ஊழலின் மொத்த உருவமாய் பாஜக இருப்பதை அறிந்து ஊரே சிரிக்கிறது என்றாலும், தெருத்தெரு வாய் வாக்கு கேட்க வருகிறார். ஆம், இன்று கோவையிலும் மக்கள் சந்திப்பு நாடகம். அய்யோ சாமி நீ எனக்கு வேணாம்.. பொய் பொய்யாய் பேசி புளுகுனது போதும் எனப் பாடு கிறார்கள் கோவை மக்கள்.