ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
புவனேஸ்வர், ஜூன் 5 - ஒடிசா விபத்து குறித்து, இந்திய ரயில்வே வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை, ஞாயிறன்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘விபத்துக்கு சதி வேலை காரணமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது’’ என்று கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும், கூறியிருப்பதாவது: “ரயில்வே சிக்னல்கள் ‘இண்டர்லாக்கிங்’ முறையில் இயக்கப்படுகின்றன. பாயிண்ட் இயந்திரம், இண்டர்லாக்கிங்-கில் ஏற்பட்ட பிரச்சனையே ரயில் விபத்துக்கு மூலகாரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தண்டவாள பாயிண்ட் இயந்திரத்தில் செய்யப்பட்டிருந்த மாற்றத்தால் இண்டர் லாக்கிங்கில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குற்றவாளிகள் கண்டறியப்படு வார்கள். இப்போதைக்கு விபத்து தொடர்பான முழுமையான விவரங்களை கூற முடியாது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முழு விவரம் தெரியவரும். விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.” தீவிரவாதிகள், சமூகவிரோதிகளின் சதி வேலையால் ரயில் கவிழ்க்கப்பட்டதா? என்றால், ‘‘அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முழு விவரம் தெரியும்’’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.