எவ்வளவு முயன்றாலும் மக்களிடம் உண்மையை மறைத்துவிட முடியாது
திருவனந்தபுரம், பிப். 14 - பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பை, எவ்வளவுதான் முயன்றாலும் மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டன. நான் யாரையும் அவமதிக்கவில்லை. ஆனாலும், நான் கூறியதற்கு ஆதாரம் காட்டுமாறு பாஜக-வினர் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, எனது உரையில் நீக்கப்பட்ட பகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து மக்களவை சபாநாயகருக்கு ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளேன். அதானிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான தொடர்பு குறித்து இந்திய மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த விஷயத்தை நான் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். மோடியுடன் சேர்ந்து அதானி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போதெல்லாம், அதானிக்கு அந்நாடுகளின் ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கின்றன. அது எப்படி?
அதானிக்கு ஒப்பந்தங்களை வழங்குமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக, தனது நாட்டின் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக இலங்கையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வங்கதேசம் சென்ற உடனேயே, அதானி வங்கதேசத்தில் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அதானியும் பிரதமரும் ஆஸ்திரேலியா சென்றனர். உடனே ஆஸ்திரேலிய சுரங்கத் திட்டங்களுக்காக, ஸ்டேட் வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடனை வழங்கியது. இன்றைக்கு 30 சதவிகித விமானப் போக்குவரத்து அதானியின் வசம் இருக்கின்றன. மோடியுடன் நட்புறவில் இருப்பதால் மட்டுமே அதானிக்கு இவை கிடைத்திருக்கின்றன. முன்பு, விமான நிலையங்களை வாங்கும் நிறுவனங்களுக்கு பல விதிமுறைகள் இருந்தன. விமான நிலையங்களை நடத்திய அனுபவம் இல்லாதவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், தற்போது அதானிக்காகவே இதுபோன்ற விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று மிகப்பெரிய விமான நிலையமான மும்பை விமான நிலையமே அதானியின் வசம்தான் இருக்கிறது. அந்த விமான நிலையத்தை வைத்திருந்தவர்களை, ஏஜென்சிகள் அச்சுறுத்தியதை அடுத்து, மிகப் பெரிய மற்றும் மிகவும் மூலோபாய விமான நிலையமான மும்பை விமான நிலையம், கவுதம் அதானியால் கையகப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நான் அதானி விவகாரத்தை பற்றி பேசும் போது, எனது முகத்தையும், மோடியின் முகத்தையும் நீங்கள் பாருங்கள். மோடி எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறார் என்று பாருங்கள். அப்படி அவர் தண்ணீர் குடிக்கும்போது அவர் கைகள் நடுங்குவதை கவனியுங்கள். என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும். அன்று நான் மோடியை குற்றம்சாட்டி பேசினாலும், எனது பேச்சு மிக கண்ணியமானதாக இருந்தது. ஆனால், எனது பேச்சை அவர்கள் கத்தரித்துவிட்டார்கள். அதே சமயத்தில், என்னை நேரடியாக தாக்கி மோடி பேசிய பேச்சை அப்படியே அவர்கள் ஒளிபரப்பினார்கள். அதானி குறித்து ஒரு வரி கூட பதிலளிக்காத பிரதமர், எனது பெயருக்குப் பின்னால் ஏன் நேரு இடம்பெறவில்லை எனக் கேட்டு நேரடியாக என்னை அவமானம் செய்துள்ளார். பொதுவாக இந்தியாவில், நமது குடும்பப்பெயர் என்பது நமது தந்தையின் குடும்பப்பெயர் தான். ஒருவேளை பிரதமர் மோடிக்கு வேண்டுமானால், இது புரியாமல் இருக்கலாம். எனினும், அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவில்லை. அதானி, அம்பானி பெயர்களை ஒன்றாகச் சொல்வது பிரதமரை அவமதிக்கும் செயல் என பாஜக-வினர் கூறுகின்றனர். ஆனால் இணையத்தில் அவர்கள் ஒன்றாக இருக்கும் படங்களைப் பார்க்கலாம். அதானியின் விமானத்தில் பிரதமர் பறப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர் அதானியுடன் நிதானமாக சிரிப்பதை நீங்கள் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனிப்பதும் புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம். அப்போதுதான், பிரதமருக்கும் அதானிக்கும் இடையே இருக்கும் தொடர்பை புரிந்துகொள்ள முடியும். பிரதமர் என்பதால், தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், மக்கள் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி நினைக்கிறார். ஆனால், நான் அவரைக் கண்டு அஞ்சுவதில்லை. அவர் பிரதமராக இருப்பது ஒரு விஷயமே இல்லை. ஏனெனில், உண்மையை ஒருநாள் அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அன்றைக்கு அவரது நிலைமையை நினைத்துதான் நான் பயப்படுகிறேன்.”