states

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவதூறு வழக்கு!

கவுகாத்தி, மே 12 - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, கவுகாத்தி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கோரப்பட்டு இருப்பதுடன், அவர் எழுதிய சுயசரிதைப் புத்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘அசாம் பொதுச் சேவைகள்’ (The Assam Public  Works - APW) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் அபிஜித் சர்மா என்பவர் ஆவார். இதனிடையே, அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அசாம் பொதுச் சேவைகள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடர்ந்தது. அதனடிப் படையில், அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய கடந்த 2015-ஆம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு தலைமை வகித்த பிரதீக் ஹஜேலா என்பவர் முறைகேடு களில் ஈடுபட்டதாக, ‘அசாம் பொதுச் சேவைகள்’ தலைவர் அபிஜித் சர்மா 2017-ஆம் ஆண்டில் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு  தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும், கடந்த 2019-ம் ஆண்டில் பிரதீக் ஹஜேலாவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ‘ஜஸ்டிஸ் பார் எ ஜட்ஜ்’ என்ற சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அந்த சுயசரிதையில், தன்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக ‘அசாம் பொதுச் சேவைகள்’ தலைவர் அபிஜித் சர்மா, திடீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். மேலும், இதுதொடா்பாக ரஞ்சன் கோகோய் தனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று காமரூப்  மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தாக்கல்  செய்துள்ள அபிஜித் சா்மா, ரூபா பதிப்பகம் வெளி யிட்டுள்ள அந்த சுயசரிதைப் புத்தகத்தைப் பதிப்பிக்கவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்க வேண்டும் என தனியாகவும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள கவுகாத்தி நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2018 முதல் 2019 வரை உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக இரந்த ரஞ்சன் கோகோய், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியவர் ஆவார். பணிஓய்வுக்குப் பிறகு, இவருக்கு ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவியை பரிசாக வழங்கியது. தற்போதும் அவர் எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.