புதுதில்லி, ஜன.11- முல்லைப் பெரியாறு அணை தொடர்பான நிர்வாக விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, முல்லைப் பெரியாறு அணை வழக்கை ஒரு விரோத வழக்காகக் கருத வேண்டாம் என தமிழக, கேரள அரசுகளை கேட்டுக்கொண்டது. இந்த வழக்கை விசாரிப்பதன் முக்கிய நோக்கம் அணைக்கு கீழே வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என்று கூறிய நீதிபதிகள் நீர் மேலாண்மை, அணையின் நீர்வரத்து போன்ற விஷயங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் தீர்க்க வேண்டிய முக்கிய விஷயங்களை இறுதி செய்யுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் மற்றும் இது தொடர்பாக வழக்குதொடுத்தவர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்காக வழக்கில் ஆஜராகும் தரப்பு வழக்கறிஞர்கள் கூட்டமொன்றை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள நீதிபதிகள், பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.