நாக்பூர், டிச.11- நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனையை பிரதமர் மோடி ஞாயிறன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், குறுக்குவழி அரசியலுக்கு தாம் எதிரானவர் என்றும், குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறத் துடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிகப்பெரும் எதிரிகள்; பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்ற நோக்கத்து டன் உள்ளவர்களால் அரசமைக்க முடியாது; சில கட்சிகள் சுயநலத்திற் காக பொருளாதாரத்தை அழிக்க விரும்புகின்றன. வளர்ச்சியின் முக்கி யத்துவம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும், “இந்தக் காலம் வசந்த காலம். மாநிலங்களின் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆற்ற லை வலிமைப்படுத்தும்” என்றார். எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க விழா நிகழ்வில், மகா ராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராவ்சாகேப் தன்வே ஆகியோர் கலந்து கொண்டனர்.
“குறுக்கு வழி” பிடிக்காது என்று கூறிய மோடி, கடந்த எட்டு ஆண்டு களில் புதுச்சேரி, மணிப்பூர், பீகார், மேகாலயா, சிக்கிம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பாஜக நடத்திய ஜனநாயகப் படுகொலைகள் (திரைமறைவு பேரம், குதிரை வியாபாரம்) மூலமே ஆட்சி யைப் பிடித்துள்ளது என்பதை வசதி யாக மறந்துவிட்டார்.
புதுச்சேரி
2016-ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சி யான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாராயணசாமி முதல்வ ரானார். நான்கு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு 3 மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி யை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் மூன்று நியமன சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் கவிழ்த்தது பா.ஜ.க. `திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாய கத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்தது.
அருணாச்சலப் பிரதேசம்
2016-ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், வெறும் 11 தொகுதி களில் மட்டும் வென்ற பாஜக, அப்பட்ட மாகக் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவை நம்பி களம் இறங்கிய கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்.
கோவா - மணிப்பூர்
2017-ஆம் ஆண்டு மணிப்பூர் மற்றும் கோவாவில் அதிக இடங் களைப் பிடித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தில் வீழ்த்தி விலைக்கு வாங்கி யதுடன், பல சிறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் பேரம் பேசி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.
மேகாலயா
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். அடுத்தபடியாக, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால் பா.ஜ.க வெறும் இரண்டு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மை யான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சூழ்ச்சிகரமாக ஆட்சியைப் பிடித்தது.
கர்நாடகம்
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத தால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதி களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களையும் மதச்சார்பற்ற ஐனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. அதையடுத்து, 16 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது (கர்நாடக சட்டசபையின் மொத்த பலம் 225) 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வில்லை. 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- மஜத கூட்டணிக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், பாஜக-வுக்கு 105 வாக்குகள் கிடைத்தன. இதைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியைக்கைப்பற்றியது.
மத்தியப் பிரதேசம்
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நிலையில் இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு சமாஜ்வாதி சட்டமன்ற உறுப்பினர், 4 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. கமல்நாத் முதல்வ ரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான ஆறு அமைச்சர்கள் உட்பட 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சௌகான் முதல்வரானார்.
காஷ்மீர்
2018-ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370-ஆவது சட்டப்பிரி வை நீக்கி மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு மாற்றியது. சிக்கிம் 2019-ஆம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்ட மன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதி களில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதேசமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களில் 2 இடங்களை பா.ஜ.க-வே கைப்பற்றியது.
‘ஆபரேஷன் தாமரை’-அம்பலப்பட்ட பாஜக
தெலுங்கானா அரசைக் கவிழ்க்க ‘ஆப ரேஷன் தாமரை’ திட்டத்திற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பிடிஜேஎஸ் தலைவரும், கேரள பாஜக கூட்டணி அமைப்பாளருமான துஷார் வெள்ளப்பள்ளி மீது லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முகவரான துஷார் வெள்ளப்பள்ளி தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.100 கோடி வழங்க முயன்றதாக முதல்வர் கே.சந்திரசேகரராவ் புகார் தெரிவித்திருந்தார். முகவர்கள் கூறிய தாக கசிந்த உரையாடலில், பாஜக அல்லாத எட்டு மாநிலங்களில் இதே போன்ற ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தியது அம்பலமானது. அது எப்படி திட்டமிடப்பட்டது என்பதையும் அந்த உரையாடல் விவரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் கூட்டத்தின் தலைவர் பிரதமர் மோடி, தாம் செய்த ஜனநாயகப் படுகொலைகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது நல்லது.