நியூயார்க், பிப்.24- உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என வலியுறுத்தி ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கான வாக்கெடுப்பை இந்தியாவும் சீனாவும் புறக்கணித்தன. ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கி பிப்ரவரி 24 உடன் ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில், வெள்ளியன்று ஐநா பொதுச்சபை யில், ‘‘உக்ரைன் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்’’ என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 193 உறுப்பினர்கள் உள்ள ஐநா பொதுச் சபையில் 141 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதர வாக வாக்களித்தன. 7 நாடுகள் தீர்மான த்துக்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தன. 141 நாடுகள் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வாக்களித்ததால் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ரஷ்யாவின் நெருங்கிய, நீண்டகால நட்பு நாடான இந்தியா, ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களையும் வாக்களிக்காமல் புறக்கணித்து வருகிறது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடி யாக வெளியேற வேண்டும் என்ற தீர்மான நிகழ்வில், ‘‘ஐக்கிய நாடுகளின் சாசன கொள்கைகளுக்கு இணங்க உக்ரைனில் பரந்த, நியாயமான மற்றும் நீடித்த அமைதி விரைவில் ஏற்பட வேண்டும்” என வலியுறுத்தியது இந்தியா.