அருப்புக் கோட்டைக் காராச் சேவு எனக்குப் பிடிக்கும்-அதை
அள்ளி உண்ண வயிற்றுப் பசியோ பஞ்சாய்ப் பறக்கும்!
திருவண் ணாமலை எள்ளடை மிகவும் சுவைக்கும்-அதைக்
திண்ணும் போது எள்ளின் வாசம் மூக்கில் மணக்கும்!
ஊட்டி வர்க்கி உண்ண எனக்கு மிகவும் பிடிக்கும்-அதை
ஊட்ட வேண்டாம் நாவில் எச்சில் தானே சுரக்கும்!
வாட்டி எடுத்த கல்லிடைக் குறிச்சி அப்பளம் பிடிக்கும்-அதை
வாயால் கடிக்கும் போது அமிழ்தச் சுவையே பிறக்கும்!
காரைக் குடியின் தேன்குழல் எனக்கு மிகவும் பிடிக்கும் -அதைக்
காதால் கேட்கும் போதே மனதில் மகிழ்ச்சி பிறக்கும்!
பாறை உள்ள மணப்பாறை முருக்கு பிடிக்கும்-அது
பாகாய்க் கரையும் வாயில் போட்டால் பல்லும் சுவைக்கும்!
திருநெல் வேலி அல்வா எனக்கு அதிகம் பிடிக்கும்-அது
தின்னத் தின்னத் தேன்தமிழாய் உள்ளம் களிக்கும்!
திருவில் லிபுத்தூர் பால்கோவா எனக்குப் பிடிக்கும்-அங்கே
திரும்புமி டமெல்லாம் கோவா மணமே சுண்டி இழுக்கும்!
கோவில் பட்டி கடலை மிட்டாய் எனக்குப் பிடிக்கும்-அது
கோடி கோடி இன்பம் தந்து நாவே மணக்கும்!
நாவினிலே எச்சில் ஊறுது நானும் விரைந்து செல்வேன்-அங்கே
நாடு புகழும் பொருளை வாங்கி நானும் உண்ணுவேன்!