states

நானும் உண்ணுவேன்! - கோவி.பால.முருகு

அருப்புக் கோட்டைக் காராச் சேவு எனக்குப் பிடிக்கும்-அதை
    அள்ளி உண்ண வயிற்றுப் பசியோ பஞ்சாய்ப் பறக்கும்! 
திருவண் ணாமலை எள்ளடை மிகவும் சுவைக்கும்-அதைக்
    திண்ணும் போது எள்ளின் வாசம் மூக்கில் மணக்கும்!

ஊட்டி வர்க்கி உண்ண எனக்கு மிகவும் பிடிக்கும்-அதை
    ஊட்ட வேண்டாம் நாவில்  எச்சில் தானே  சுரக்கும்!
வாட்டி எடுத்த  கல்லிடைக் குறிச்சி அப்பளம் பிடிக்கும்-அதை
    வாயால் கடிக்கும்  போது அமிழ்தச் சுவையே  பிறக்கும்!

காரைக் குடியின்   தேன்குழல் எனக்கு மிகவும் பிடிக்கும் -அதைக்
    காதால் கேட்கும் போதே மனதில்   மகிழ்ச்சி  பிறக்கும்!
பாறை உள்ள மணப்பாறை முருக்கு பிடிக்கும்-அது
    பாகாய்க் கரையும் வாயில் போட்டால்  பல்லும் சுவைக்கும்!

திருநெல் வேலி அல்வா எனக்கு அதிகம் பிடிக்கும்-அது
    தின்னத் தின்னத் தேன்தமிழாய்  உள்ளம் களிக்கும்!
திருவில் லிபுத்தூர் பால்கோவா எனக்குப் பிடிக்கும்-அங்கே
    திரும்புமி  டமெல்லாம் கோவா மணமே   சுண்டி இழுக்கும்! 

கோவில் பட்டி கடலை மிட்டாய் எனக்குப் பிடிக்கும்-அது
    கோடி  கோடி இன்பம் தந்து  நாவே மணக்கும்! 
நாவினிலே எச்சில் ஊறுது  நானும் விரைந்து  செல்வேன்-அங்கே
    நாடு  புகழும்  பொருளை  வாங்கி நானும்  உண்ணுவேன்!