states

img

எங்களைத் தொட்டா ஷாக் அடிக்கும்.. !

  1. மாணவர்களின் அச்சத்தைப் போக்க நான் அவங்களுக்கு அடிக்கடி வகுப்பு எடுக்கறதா இருக்கேன். “பரீக்சா  பே சார்ச்சா” – ங்கற பேரை  நான் அந்த வகுப்புக்கு வச்சிருக்கேன். வகுப்பு எடுக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே படிச்சுருக்கேனான்னு கேட்டுறாதீங்க.. நான் என்ன சொல்றேனோ அதான் வகுப்பு. மாணவர்கள்  என்னோட ஆட்சியைப் பற்றி மட்டும் பயந்தாப் போதும். என்னோட ஆட்சியைத் தொட்டா ஷாக் அடிக்கும்.. சிறையிலே கொண்டுபோய்த் தள்ளும். சின்ன வயசிலே அவங்க ஏன் வம்பை விலைகொடுத்து வாங்கணும்? இடதுசாரி மாணவர்கள் சொல்றதைக் கேட்டு தவறான திசையிலே பயணிக்க வேண்டாம்னு என்னோட வகுப்புகள்ல அவங்களை எச்சரிக்கிறேன்.. 
  2.      ஜி 20 தலைமைப் பொறுப்பு இப்ப என்கிட்ட வந்திருக்கு. ஓராண்டுக்கு நான் தலைவரா இருப்பேன். இது சுழற்சி முறையிலே வர்ரதுதான். ஒரு ஆண்டிலே இந்தோனேசியா இருந்தா இன்னொரு ஆண்டிலே அமெரிக்கா இருக்கும். அவ்வளவுதான். ஆனா அதை அப்படியே நான் லேசா விட்டுருவேனா? மோடி யாரு? எறும்பையும் யானையாக்கிக் காட்டறவன் இல்லியா? புதுசா ஒரு கோஷம் கண்டுபிடிச்சுருவேன்ல? “ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” -னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் ஒரு ஆண்டுக்கு இந்த முழக்கம் இந்தியாவிலே நகரங்கள், கிராமங்கள்.. பூரா ஓங்கி ஒலிக்கப் போவுது.. !  
  3. ஒரே நாடுன்னதும் உங்களுக்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேஷன் கார்டு ஞாபகம் வந்திருக்குமே? இதைச் சொல்லி வடமாநிலங்கள் ள்லேருந்து லட்சக்கணக்கான பேர்களை தமிழ்நாட்டிலே  குடியமர்த்தப் போறோம். ரேஷன் கடைகள்லே கூட்டம் நெரியும். சண்டை நடக்கும். கலவரம் நடக்கும். திராவிட மாடல் ஆட்சியை வெரட்டி யடிப்போம். தமிழ்நாட்டிலே நான் கால் மேலே கால் போட்டு ஆட்சியிலே உட்கார்ந்துக்குவேன். “ இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க” -ன்னு வினு சக்ரவர்த்தி மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டே ஊர்வலம் போவோம்.. ! 
  4.   தமிழ்நாடு மேலே போர் தொடுக்க புதுசா இன்னொரு ஆயுதம் கண்டுபிடிச்சுட்டேன்.. அதுதான் “காசி தமிழ் சங்கமம்..”!  ஆயிரக்கணக்கான மாணவர்களை, இளைஞர்களை தமிழ்நாட்டிலேருந்து காசிக்குக் கூட்டிட்டுப் போறோம். தேர்வுக் குழுவிலே ஆர்.என்.ரவி, அண்ணாமலை, இபிஎஸ்-ஓபிஎஸ் எல்லாரும் இருப்பாங்க. காசியிலேருந்து அயோத்திக்கு கூட்டிட்டுப்போய் அங்கே பாபர் மசூதியை எப்படி இடிச்சோம்.. ராமர் கோவிலை அங்கே கட்ட சுப்ரீம்  கோர்ட்டை எப்படி வளைச்சுப் பிடிச்சோம்.. அடுத்து எந்த மசூதியை இடிச்சுட்டு கோவில் கட்டப்போறோம்.. எந்த மசூதிக்குள்ள சிவலிங்கத்தைக் கொண்டுபோய் வச்சுட்டு கலவரத்தை ஏற்படுத்தப் போறோம் என்றெல்லாம் சொல்லி நம் பாரம்பரியக் கலாச்சா ரத்தை அவங்களுக்குள்ளே இறக்கப் போறோம்.. !   
  5.     தேர்தல் கமிஷன், அமலாக்கத் துறை, சிபிஐ எல்லாத்தை யும் வளைச்சுப் பிடிச்சுட்டோம்கறது உங்களுக்குத் தெரியும்.  ஆனா இப்ப சுப்ரீம் கோர்ட் எங்ககிட்ட வாலாட்டத் தொடங்கியிருக்கு. ஒட்ட நறுக்கிடுவோம்னு அவங்களுக்குத்  தெரியலை. கொலீஜியம் சொல்றதை நாங்க அப்படியே கேட்கணுமாம்! இது எப்படி இருக்கு? நீதிமன்றங்கள்லே காலியிடங்களை நிரப்பாம விட்டா என்ன ஆகும்? வழக்குகள்லாம் அப்படியே தேங்கிப் போகும். மக்கள் நீதிபதிகளைத்தான் திட்டுவாங்க.. நீதிமன்றம் எங்க வழிக்கு வர்ரவரை விட மாட்டோம்! 
  6. நான் சாதாரண ஏழைக் குடும்பத்திலேருந்து வந்தவன். ராகுல் மாதிரி அரச குடும்பத்திலேருந்து வந்தவன் கிடையாது. மோர்பி பாலம் இடிஞ்சு விழுந்து 141 பேர் செத்துப் போனதுக்கு ராகுலும் மத்த எதிர்க்கட்சியினரும் என்னைக் குற்றம் சொல்றாங்க. பாலம் இடிஞ்சு விழுந்தது கடவுள் செயல். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?
  7. பண்டைய இந்தியாவிலே இருந்தது எல்லாம் ஜனநாயக ஆட்சிதான். முடியாட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ நாம் அறியாதது. முகலாயர்கள் வந்த பிறகுதான் இங்கே சர்வாதிகாரம் வந்தது. தீவிரவாதம் வந்தது. அதை ஒழிக்கவே நாங்க பாடுபட்டுக்கிட்டிருக்கோம். இதைச் சொல்லித்தான் நாங்க ஓட்டு வாங்கிட்டிருக்கோம். வேலையின்மை, வறுமை, கல்வி, மருத்துவம்-னு எதையெல்லாமோ சொல்லி எதிர்க்கட்சிக்காரங்க மக்கள் கவனத்தைத் திசைதிருப்பிக்கிட்டிருக்காங்க. ஏமாந்து போயிடாதீங்கன்னு மக்களை நாங்க எச்சரிச்சுக்கிட்டே இருக்கோம்.. இருப்போம்!  சரியா..? 

-ராஜகுரு

 

;