புதுதில்லி, பிப். 10 - பிரதமர் மோடி குறித்த ஆவணப் படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தைத் தடைசெய்யக் கோரி, இந்து சேனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021- இன் விதி 16-இன் கீழ் ஒன்றிய அரசு அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்தது. எனினும், இந்த தடையை மீறி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழ கங்களிலும், கல்லூரிகளில் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. அதேபோல, இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்போதுவரை இந்த ஆவணப்படத்தை மக்களுக்கு திரையிட்டு காண்பித்து வருகின்றனர். இந்நிலையில், இந்துசேனா அமைப் பின் தலைவர் குப்தா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “உலக அளவில் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக செய்யப்படும் சதிவேலையாகவே பிபிசி-யின் இந்த ஆவணப்படம் இருக்கிறது.
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக சித்தரிக்கும் இந்த ஆவணப்படம், மோடி யின் நற்பெயருக்கு மட்டும் களங்கம் விளை விக்கவில்லை. மாறாக, இந்தியாவின் சமூக கட்டமைப்பையே அழிக்கும் வகையில் அதன் பிரச்சாரம் உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் பிபிசி-க்கு தடைவிதிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவானது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, “இந்த மனு முழுக்க முழுக்க தவறான புரிதலுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பிபிசி-க்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்திடம் எப்படி உங்களால் கேட்க முடியும்? எப்படி உங்களால் இப்படி வாதிட முடிகிறது?” என சரமாரியாக கேள்வியெழுப்பினார். பின்னர், புரிதல் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி, இந்து சேனா தலைவரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.