states

img

‘பீம் ஆர்மி’ தலைவர் சந்திரசேகர் ஆசாத்தைக் கொல்ல முயற்சி

புதுதில்லி, ஜூன் 29 - இளம் தலித் தலைவர்களில் ஒருவரும், ‘பீம் ஆர்மி’யின் தலைவருமான சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடும்,  கொலைவெறித் தாக்குதலும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஆசாத்தின் வயிற்றுப் பகுதியில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்தாலும், நல்வாய்ப்பாக, நூலிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, இடதுசாரிகள், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப் படுத்தி இருப்பதுடன், கடும் கண்டனமும் தெரி வித்துள்ளனர். உத்தரப் பிரதேச பாஜக அரசால் பாதுகாக்கப்படும் குற்றவாளிகளே, ஆசாத்தை  கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது தாக்குதல்

‘பீம் ஆர்மி’ மற்றும் ‘ஆசாத் சமாஜ் (கன்சி ராம்) கட்சி’யின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்,  உ.பி. மாநிலம் சஹரான்பூர் மாவட்டத்திலுள்ள தனது கட்சி நிர்வாகியின் இல்லத்தில் புதனன்று  துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவரது கார், தியோபந்த் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வலது புறத்தில் மற்றொரு காரில் வந்த,  அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். கார் கண்ணாடி கள் உடைந்து நொறுங்கியதுடன், இருக்கைகள்,  காரின் கதவுகள் மீதும் குண்டுகள் பாய்ந்தன. சந்திரசேகர் ஆசாத் சுதாரிப்பதற்கு உள்ளேயே,  அவரது இடுப்பை ஒட்டிய வயிற்றுப்பகுதியிலும் ஒரு குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் ஆசாத், தியோபந்த்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹரான்பூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை தொடரப்பட்டது. தற்போது ஆசாத் அபாய கட்டத்தைத் தாண்டி, நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைதி காக்குமாறு  தொண்டர்களுக்கு வேண்டுகோள்

சம்பவம் குறித்து அறிந்த ஆசாத்தின் ஆதர வாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். அவர்கள் போராட்டங்களில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “இது போன்ற திடீர் தாக்குதலை நான் எதிர்பார்க்க வில்லை. நாடு முழுவதும் உள்ள எனது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அமைதியை நிலைநாட்டுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசிய லமைப்பு ரீதியாக நமது போராட்டத்தை தொடர்வோம். கோடிக்கணக்கான மக்களின் அன்புடனும் ஆசிர்வாதத்துடனும் நான் நலமாக  உள்ளேன்” என்று சந்திரசேகர் ஆசாத் தெரி வித்ததை தொடர்ந்து, அவர்கள் அமைதியைக் கடைப்பிடித்தனர். முன்னதாக தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய சந்திரசேகர் ஆசாத், “சம்பவம்  தொடர்பாக எனக்கு முழுமையாக நினைவில் இல்லை. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களின் கார் சஹரான்பூர் நோக்கிச் சென்றது. நாங்கள் யு-டர்ன் எடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் நடந்தபோது எனது இளைய சகோதரர் உட்பட ஐந்து பேர் காரில் இருந்தோம்” என்று குறிப்பிட்டார். “நான் ஸ்பீட் பிரேக்கரில் வாகனத்தை மெது வாக்கினேன்; திடீரென காரில் வந்த சில ஆயுத தாரிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு தோட்டா ஆசாத்தில் உடலில் பாய்ந்தது” என்று கார் ஓட்டுநர் மணீஷ் குமார் கூறினார். “தாக்குதல் நடத்தியவர்கள் வந்த கார் ஹரியானா எண் ஸ்விப்ட் (HR70D0278) ஆகும்.  நல்வாய்ப்பாக எங்கள் தலைவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இல்லையெனில் ஏதேனும் பெரிய சம்பவம் நடந்திருக்கும்” என்று பீம் ஆர்மியின் மேற்கு உ.பி. பொறுப்பாளர் கபில் ஆசாத் அதிர்ச்சியை வெளியிட்டார்.

பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்ட  உ.பி. பாஜக அரசு

ஏற்கெனவே மாநில அரசுக்கு தாங்கள் கடிதம் எழுதியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். “எங்கள் தலைவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மாநில (பாஜக) அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளோம். ஆனால் பலனில்லை. இப்போது, என்ன நடந்தது என்று பாருங்கள். இந்த அர சாங்கத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது, பொது மக்களின் கதி என்ன?” என்று அவர் கேட்டுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

ஆசாத் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சியின் தேசியத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது, அதிகாரத்தில் இருப்பவர்களால் பாதுகாக்கப்படும் குற்ற வாளிகள் மூலம் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான செயலாகும். பாஜக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கே பாது காப்பு இல்லை என்றால், பொதுமக்களின் கதி  என்ன? உ.பி.யில் காட்டாட்சி நடக்கிறது” என்று  சாடியுள்ளார். “உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

இந்த வன்முறை  சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். “உ.பி. மாநிலத்தில் குற்றவாளிகள் மிகுந்த தைரியம் பெற்றுள்ளனர். அவர்கள் ‘எல்லா  வரம்புகளையும் மீறத் தொடங்கியுள்ளனர்’. உத்தரப்பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இப்போது அரசாங்கம் மற்றும் குற்றவாளிகள் ஆகிய இரண்டு தரப்பினராலும் குறிவைக்கப் பட்டு உள்ளனர்” என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ் கண்ட னம் தெரிவித்துள்ளனர். மேலும், “பீம் ஆர்மி தலைவர் மீதான ‘கொடிய தாக்குதல்’ மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையின் லட்ச ணத்தைக் காட்டுகிறது” என்றும், ‘அரசே எழுந் திரு அரசே!’ என்றும் இடித்துரைத்துள்ளார். இதேபோல ‘பீம் ஆர்மி’ அமைப்பும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “சந்திர சேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்கு தல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்ய வும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும்” என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வழக்குப் பதிவு; 4 பேர் கைது?

இதனிடையே, பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஆசாத்தின் ஓட்டுநர்  மணீஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படை யில், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும், 1989-ஆம் ஆண்டு  பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளில் தியோபந்த் காவல் நிலையத்தில் வியாழக்கிழமையன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு எதிராக போராடி வந்த சந்திரசேகர் ஆசாத்

சந்திரசேகர் ஆசாத், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கட்கவுலி கிராமத்தில் பிறந்தவர் ஆவார். தற்போது 38 வயதாகும் அவர், ஒரு சட்டப் பட்டதாரி. முன்பு ‘சந்திரசேகர் ஆசாத் ராவணன்’ என்று அறியப்பட்ட அவர், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது பெயரின் கடைசி பகுதியை அவர் கைவிட்டார். மக்களின் தேர்வு “ராமனா.. ராவணனா..?” என்று எதிர்க்கட்சிகள் மக்களிடம் எளிதாக மதவெறிப் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதற்காக, பெயரிலிருந்த ‘ராவணன்’ என்பதை அவர் நீக்கினார்.   முன்னதாக, தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக வினய் ரத்தன் சிங் ஆகியோருடன் சேர்ந்து, 2014-ஆம் ஆண்டு ‘பீம் ஆர்மி’ என்ற  அமைப்பைத் துவக்கினார். ஒடுக்கப்பட்ட  குழந்தைகளுக்கான மேற்கு உத்தரப்பிரதேசத் தில் ஏராளமான பள்ளிகளையும் ஆரம்பித்தார். 2016-ஆம் ஆண்டு மார்ச்சில், கட்கவுலி கிராமத்தின் நுழைவாயிலில் “டா கிரேட் சமர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கிராமம், கட்கவுலி உங்களை வரவேற்கிறது” என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இதில், சமர் முன் ‘டா கிரேட்’ என்ற வார்த்தைகளை தாக்கூர் பிரிவினர் எதிர்த்தனர். அந்தப் பலகையை தீவைத்து எரித்து சாம்பலாக்கவும் செய்தனர். அப்போது, பீம் ஆர்மி சார்பில் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திய ஆசாத், மீண்டும் அந்த பலகையை நிறுவினார். இது ஆசாத்தின் அரசியல் செல்வாக்கை உயர்த்தியது. தலித் இளை ஞர்களின் நம்பிக்கைக்கு உரிய போராளியாக அவரை அடையாளம் காட்டியது.

மே 2017 இல், சஹரான்பூரில் உள்ள ஷபீர்பூர் கிராமத்தில், ராஜபுத்திர ஆட்சியாளர் மகாராணா பிரதாப்பின் நினைவாக நடந்த ஊர்வலத்தின் போது, தலித் மற்றும் ராஜ்புத் பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு ராஜபுத்திரர் கொல்லப்பட்டார். மறு புறத்தில் 25 தலித் வீடுகள் எரிக்கப்பட்டன. அப்போது, தலித் சமூகத்தினரிடம் வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதற்காக ஆசாத் காவல்துறையினரால் 24 எப்ஐஆர்-களில் குற்றம் சாட்டப்பட்டார். அதே மாதத்தில், தில்லியை நோக்கி மாபெரும் கண்டனப் பேரணியையும் பீம் ஆர்மி  சார்பில் ஆசாத் நடத்தினார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படம் மற்றும் நீலக் கொடி களை ஏந்தியும், ஜெய் பீம் முழக்கங்களை எழுப்பியும், ஆசாத்தின் முகமூடிகளை அணிந்த படியும் பீம் ஆர்மி சென்றனர். அப்போது, ஆசாத்தை கைது செய்ய தில்லி காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், உ.பி. போலீசாரின் பிடியில் சிக்காமல், மேடையில் தோன்றினார். ஆசாத் பின்னர் இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அலகாபாத் உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய பிறகு, உத்தரப்பிரதேச பாஜக அரசு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை (NSA) ஏவியது. இந்தச் சட்டத்தின் கீழ் அவர் 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு, இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தில்லி ஜும்மா மசூதியை நோக்கி நடத்தப்பட்ட பேரணி மூலமும் சந்திரசேகர் ஆசாத் புகழ்பெற்றார். கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே அந்தக் கட்சிக்கு எதிராகவும், சாதி ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகவும் தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இந்தப் பின்னணியிலேயே அவர் மீது பாஜக ஆளும் உ.பி.யில், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது.