புதுதில்லி, ஜன. 10 - வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியும், தற்போது ஐந்தாவது முறையாக பிப்ரவரி வரை மீண்டும் அவகாசம் வாங்கியுள்ளது. தனது கட்சி வழக்கறிஞரை வைத்தே வழக்கு தொடர வைத்த பாஜக, அதற்குப் பதிலளிக்காமல், வழி பாட்டுத் தலங்கள் சட்டத்தை தொட ர்ந்து சர்ச்சையிலேயே வைத்திருக்கும் வகையில் இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்யாமல் போக்கு காட்டி வருகிறது. “கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு விடு தலையடைந்த போது, அனைத்து வழி பாட்டுத் தலங்களும் எந்த தன்மையில் இருந்ததோ, அதில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்” என்று வழி பாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (Places of Worship (Special Provisions) Act 1991) கூறுகிறது. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு, கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில், அயோத்தியில் ராம ஜென்மபூமி விவகாரத்திற்கு மட்டும்- அப்போது அந்த வழக்கு நிலுவை யில் இருந்ததால்- விலக்கு அளிக்கப் பட்டது. இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட லாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் கூட, ராமஜென்ம பூமியைத் தவிர, இதர தலங்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடு கள் சட்டத்திலிருந்து விதி விலக்கு அளிக்கப்படாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. வழி பாட்டுத் தலங்களின் தற்போதைய நிலைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படும் பட்சத்தில் அந்த வழக்குகள் ஊக்குவிக்கப்படாது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகூறியது.
ஆனால், வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் சில பிரிவு களுக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினி உபத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். “வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களில் இந்துக்கள், ஜெயின்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு சட்டரீதியாக தீர்வு கிடைப்பதைத் தடுப்பதன் மூலம், இந்தியாவுக்கு படையெடுத்தவர்கள் மற்றும் சட்டத்தை உடைத்தவர்களின் செயல்களை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நிரந்தரமாக பாதுகாக்கிறது. இது அரசமைப்புக்கு முரணானது” என்று அஸ்வினி உபாத்யாய கூறினார். உபாத்யாயவின் இந்த மனு முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களையே மறைமுகமாகக் குறிவைப்பதால், அவரின் மனு மீதான விசாரணையில் தலையிட்டு, முஸ்லிம் சமூகத்தினரின் கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரி ஜம்மியத்-உலமா-ஏ-ஹிந்த் அமைப்பும் மனு தாக்கல் செய்தது. இதுதவிர, காசியின் அரச குடும்பம் சார்பிலும், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு செப்டம்பர் 9, அக்டோபர் 12, அக்டோபர் 31, டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் நான்குமுறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஒன்றிய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. இந்நிலையில், அஸ்வினி உபாத்யாய தொடர்ந்த வழக்கு திங்க ளன்று (ஜன. 9)தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஏற்கெனவே அயோத்தி தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதி கள் கொண்ட அமர்வு, வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை உறுதி செய்துள்ளதால், இந்த பொதுநல வழக்குகளை விசார ணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார். மேலும், “இந்த வழக்கை பொறுத்தவரை 2 அம்சங்கள் உள்ளன. ஒன்று இந்த வழக்கு பொது நல வழக்கின் தன்மையில் இல்லை. மற்றொன்று குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தை மட்டும் குறிப்பிடாமல் மொத்த மாகவே சட்டத்தின் விதிகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதேபோல ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிருந்தா குரோவர், “வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான மனு நிலுவை யில் இருக்கும்போதே, ஞானவாபி மசூதி, ஈத்கா பள்ளிவாசல் போன்ற தகராறுகள் சட்டத்தை நேரடியாக மீறும் வகையில் உள்ளன. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரிய வில்லை. முந்தைய உத்தரவின் அடிப் படையில், ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்காமல் உள்ளது” என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது, ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு பதிலளிக்க வழக்கம்போல மீண்டும் அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பிப்ரவரி இறுதிக்குள் பதிலளிக்குமாறு உத்தர விட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.