states

மக்களவையில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு!

புதுதில்லி, ஏப். 5 -  அரசியலமைப்பு அளித்த கடமை, பொறுப்புகளில் இருந்து தமிழக ஆளுநர் விலகி நடப்பதாகவும், ‘நீட்’ விலக்கு உட்பட சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 3 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த நோட்டீஸை அளித்திருந்தார். ஆனால், இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், செவ்வாயன்று திமுக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ‘தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்’ என முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவைக்குத் திரும்பி வந்த அவர்கள், மறுபடியும் சபாநாயகரிடம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போதும் அனுமதி மறுக்கப்பட்டதால், 2-ஆவது முறையாக திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்து, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.