states

img

இமாச்சலத்தில் சிபிஎம் பிரதிநிதித்துவம் உறுதி

ராகேஷ் சின்ஹா இமாச்சலத்தின் கம்யூனிஸ்ட் முகம். தியோக் தொகுதியின் எம்.எல்.ஏ., போராட்டக்காரர். அக்கினி பேச்சாளர்… என சிறப்புகள் ஏராளம். இமாச்சலில் தேர்தல் நிலவரங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ராகேஷ் சின்ஹாவுடன் தேசாபிமானியின் தில்லி தலைமை நிருபர் எம்.பிரசாந்த் நடத்திய நேர்காணல்.

இமாச்சலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான வாய்ப்புகள் என்ன?

இமாச்சலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே சிபிஎம் முழக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள இடங்களில் பாஜகவை தோற்கடிக்க எந்த வேட்பாளருக்கு வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள். சட்டமன்றத்தில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர்கிறது. தற்போதைய சட்டமன்றத் தொகுதியான தியோக் தவிர, வேறு சில இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி, பலத்த போட்டியை உரு வாக்கியுள்ளது. மக்கள் பிரச்சனைகளை எழுப்புவதற்கு சிபிஎம் உறுப்பினர் சட்டமன்றத்தில் இருப்பது அவசியம்.

இமாச்சல் தேர்தலில்  முக்கிய பிரச்சனைகள் என்ன?

முக்கியமாக மூன்று பிரச்சனைகள் உள்ளன.  ஒன்று அதிகரித்து வரும் வேலையின்மை.  இரண்டு, தீவிர பணவீக்கம். மூன்றாவது, விவசாயத்துறை சந்தித்து வரும் ஆழமான நெருக்கடி. மாநிலத்தில் 86 சதவிகித சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலமே உள்ளது. ஆப்பிள் சாகுபடி முதன்மையானது. மொத்தமுள்ள 6 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில், 1.3 லட்சம் ஹெக்டேரில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆப்பிள் விவசாயிகள் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். வெளிநாட்டு ஆப்பிள்களை இறக்குமதி செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல்வேறு நாடுகளின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் ஆப்பிள் இறக்குமதிக்கு வழி வகுத்துள்ளன. பிரதமர் எப்போதும் இறக்குமதி வரியை உயர்த்துவதாக கூறி வருகிறார் ஆனால் அதை அமல்படுத்தவில்லை.

அதே நேரத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வகையான மானியங்களும் கடுமையாக குறைக்கப்பட்டன. மற்ற வேளாண் பயிர்களான பாதாம், செர்ரி, பிளம்ஸ் மற்றும் பல்வேறு காய்கறி விவசாயிகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அரசு வேலைகள் அதிகளவில் அவுட்சோர்சிங் செய்யப்படு கின்றன. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சொற்ப ஊதியமே கிடைக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தேர்தலில் முக்கிய மான விஷயமாக இருக்கும். மற்றொன்று சேவைத் துறைகளை தனியார்மயமாக்குவது. சுகாதாரம், கல்வி,  மின்சாரம், குடிநீர் என அனைத்து துறைகளும் தனியார் மய மாக்கப்படுகின்றன. தேர்தலில் பெரு நிறுவனங்களின் பணப் புழக்கம் இருக்கும் என்பது நிச்சயம். ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனினும், மக்களின் ஆதரவுடன் இந்தக் காரணிகள் அனைத்தையும் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அயோத்தி, காசி, காஷ்மீர் போன்ற வகுப்பு வாத பிரச்சனைகளை பாஜக மீண்டும் எழுப்புகிறது. இது தேர்தலை பாதிக்குமா?

2014இல் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மிக மோசமான புதிய தாராளவாத கொள்கைகளை திணித்து வருகிறார். இது பணக்காரர்களுக்கும் ஏழை களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி யுள்ளது. பா.ஜ.க.வின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக மக்கள் உணர்வு எழுந்து வருகிறது. எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்துதான் தேர்தல் காலங்களில் வகுப்புவாத பிரச்சனைகளில் தஞ்சம் அடை கிறார்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, அயோத்தி யில் ராமர் கோயில் கட்டுவது போன்ற பிரச்சனைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் மக்களின் வாழ்க்கை யைப் பாதிக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளே பிரதானமாக உள்ளன. மக்கள் இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார்கள். கார்ப்பரேட் பணத்தால் இமாச்சல் மக்களின் தலைவிதியை மாற்ற முடியாது.

இமாச்சலத்தில் பெரிய வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாக பாஜக கூறி வருகிறது. உண்மை நிலை என்ன?

வளர்ச்சி என்ற பாஜகவின் பேச்சுக்கு எந்த அடிப்படையும் இல்லை. உண்மை வேறு. பாஜக ஆட்சிக்கு எதிராக பல மாதங்களாக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக சொல்லும் வளர்ச்சி வெறும் மூடுதிரை. அவர்கள் இப்படி அடிக்கடி மக்களை தவறாக வழி நடத்தியுள்ளனர் என்பதுதான் உண்மை. ஆனாலும், தற்போது அவர்களின் கார்ப்பரேட் சார்பு கொள்கைகள் பெரும் மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக விவசாயத்தில்  விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர். அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்ற பிரிவினரும் பல்வேறு காரணங்களுக்காக வருத்தப்படு கிறார்கள். அதனால், அரசு நிர்வாகத்திற்கு எதிராக, பெரும் மக்கள் கருத்து எழுந்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசில் இமாச்சலத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களும், கட்சித் தாவல்களும் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவில்லையா?

காங்கிரஸின் உள் விவகாரங்கள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் தீர்ப்புதான் முக்கியமானது. பா.ஜ.க.  கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மக்கள்தான் அவர்களை  விரட்டப்போகிறார்கள். காங்கிரஸ் அல்ல. எதிர்க்கட்சியான, காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. அவர்களுக்குள் இருக்கும் உட்கட்சி பூசல்களும் பதவிகளுக்கான சண்டையும் கடுமையானது. இருந்த போதிலும் இமாச்சல பிரதேச மக்கள் பா.ஜ.க வை தோற்கடிப்பார்கள்.

ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது அணியாக உருவெடுக்குமா?

தில்லியிலும், பஞ்சாபிலும் ஆட்சிக்கு வர முடிந்த ஆம் ஆத்மி, இமாச்சலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சிக்கு சில பகுதிகளில் மட்டுமே  வாக்குகள் உள்ளன. ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் தற்போது அந்த உற்சாகம் இல்லை. வெளியூர்களில் இருந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டனர். கார்ப்பரேட் சார்பு வலதுசாரிகளுக்கு மாற்றாக இமாச்சலில்  இடதுசாரிகள் வலுவான முன்னிலையில் உள்ளனர். 68 தொகுதிகளிலும் இடதுசாரிகள் போட்டியிடவில்லை. ஆனால், எங்கெல்லாம் போட்டியிடுகிறோமோ அங்கெல்லாம் செயல்திறன் மேம்படும். இடங்கள் அதிகரிக்குமா என்பதை இப்போது கூற முடியாது. சட்டசபை யில் எங்களது இருப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதே நோக்கம்.

நன்றி : தேசாபிமானி, தமிழில் : சி.முருகேசன்