புதுதில்லி, ஜூன் 2 - ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்களையும், அப்பாவி மக்களையும் பயங்கரவாதிகள் கொலை செய்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் 8-ஆம்ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திலேயே பாஜக மும்முரம் கட்டி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப மாதங்களாக பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜம்மு பகுதியின் சம்பா மாவட்டம் குல்காமில் உள்ள கோபால்போராவில் 36 வயதான அரசு பள்ளி ஆசிரியை ரஜினி பாலா என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். கடந்த மே மாதத்தில் 2-ஆவது முறையாக முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மே மாதத்தில் மட்டும் காஷ்மீரில் நடந்த ஏழாவது இலக்கு இந்தக் கொலையாகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் தொகுப்பின் கீழ் பணிபுரிந்த காஷ்மீர் பண்டிட்டுகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்துக்குள் தங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றாவிட்டால், பள்ளத்தாக்கில் இருந்து பெருமளவில் இடம்பெயர்வோரும் என எச்சரிக்கை செய்தனர். இந்நிலையில், காஷ்மீரில் அரசு ஊழியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு ஒன்றிய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், “காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றும் ஒரு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். காஷ்மீர் பண்டிட்டுகள் 18 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாஜக 8 ஆண்டுகளை (பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 8 ஆண்டுகள் நிறைவு) கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளது. பிரதமரே இது திரைப்படம் அல்ல, காஷ்மீரின் இன்றைய யதார்த்தம்!” என்று சாடியுள்ளார்.