புதுதில்லி, ஜன. 13- பாரத் ஜோடா யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சி களின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் பாஜக-வினரின் மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ‘பாரத் ஜோடா யாத்ரா’ (இந்திய ஒற்றுமைப் பயணம்)என்ற பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கிவைத்த இந்த நடைபயணம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா என தற்போது பஞ்சாப்பில் நுழைந்துள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 750 கி.மீ. தூரத்திற்குத் திட்ட மிடப்பட்ட இந்த பயண தூரத்தில், ராகுல் காந்தி இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ. நடந்துள்ளார். விரைவில் அவர் ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைகிறார். இந்துத்துவா கூட்டத்தால், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளார். இதையொட்டி காங்கிரஸ் தலைமை விரிவான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்றும் வகையில், பாரத் ஜோடா யாத்ரா நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில், 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
“ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கத்திலிருந்தே, ஒத்த எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியரையும் பங்கேற்க அழைத்துள்ளோம். அதற்கேற்ப பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் பல்வேறு கட்டங்களாக நடைபயணத்தில் பங்கேற்றனர். அந்த வகையில், ஜனவரி 30-ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு விழாவிலும் பங்கேற்குமாறு உங்களை அழைக்கிறேன். வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தத்திற்கு எதிரான அயராத போராட்டங்களில் ஈடுபட்டு ஜனவரி 30 அன்று தனது உயிரை இழந்த மகாத்மா காந்திக்கு இந்த விழா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள வெறுப்புவாதம், வன்முறை பற்றி குரல் கொடுக்கும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நீங்கள் பங்கேற்றால், அது யாத்திரையின் நோக்கத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும். நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று, நாடு பொருளாதார, சமூக, அரசியல் சிக்கலை சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில், நடைபயணம் நேரடியாக லட்சக்கணக்கான மக்களை இணைக்கிறது” என்று மல்லிகார்ஜூன கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.