states

img

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்

புதுதில்லி, நவ. 23 - ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சார விளையாட்டு. அது சட்டப்படிதான் நடக் கிறது; காளைகள் துன்புறுத்தப்படவில்லை; மாறாக, அதிகம் மதிக்கப்படுகின்றன; எனவே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வாதத்தை முன்வைத்துள்ளது. காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ (PETA) உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது. உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்று 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தது.  ஆனால், இந்த தடைக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு விலங்குகள் வதைச் சட்டத்தில்  திருத்தம் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியது. இந்த அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

எனினும், ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் துன்புறுத்துகிறார்கள்; காளைகள் கொல்லப்படுகின்றன; சட்டப்படி இது தவறு; ஆனால் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து உள்ளது; இந்த சிறப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ‘பீட்டா’,  (People for the Ethical Treatment of Animals - PETA), ‘கூபா’ (Compassion. Unlimited Plus Action - CUPA) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதி ன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதி கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.  கடந்த முறை இந்த வழக்குகள் விசார ணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டிற்கு எதிரான வழக்குகளை உடனடியாக தள்ளு படி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு  அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். அத்துடன் கூடுதல் ஆவணங்களை வழக்கில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் நவம்பர் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள விசார ணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினார். ஆனால், “ஜல்லிக்கட்டி ற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்; ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு துவங்கும் என்பதால் வழக்கில் தாமதம் இன்றி விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று பீட்டா, கூபா  அமைப்புகள் வலியுறுத்தின.

இதையடுத்து, அறிவித்தபடி நவம்பர் 23-இல் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி புதனன்று விசாரணை நடைபெறும் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென  வழக்கு விசாரணையை வியாழக்கிழமை க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனிடையே, பீட்டா, கூபா மனுக் களுக்கு எதிராக எழுத்துப்பூர்வ வாதங் களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில், “விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை, விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தவறானது. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்பே ஜல்லிக்கட்டு கொண்டு வந்தோம். ஜல்லிக்கட்டு சட்டப்படிதான் நடக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவை யான பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டின் போது மாடுகள் அதிகம் மதிக்கப்படு கின்றன. விலங்கு வதை நடைபெறு வதில்லை. காளைகளைத் துன்புறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. முழு பாதுகாப்போடுதான் போட்டி நடக்கிறது. எனவே, இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கூடாது. இது கலாச்சாரத்துடன் ஒன்றிய விளையாட்டு. இந்த விளை யாட்டிற்கு தடை விதித்தால் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் பறிபோகும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்த விளையாட்டு தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும்.  விலங்குவதை என்ற பெயரில் ஜல்லிக் கட்டு போட்டிகளுக்கு முழுமையான தடை  விதிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு போட்டி களை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். தமிழக அரசு விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்பு கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளு படி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், பீட்டா, கூபா-வுக்கு எதிராக, நாடாளுமன்ற மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் மனுதாரராக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.